;
Athirady Tamil News

ஆயுள் தண்டனை கைதிகள் 11 பேர் விடுதலை: குஜராத் அரசு நடவடிக்கையால் பரபரப்பு..!!

0

குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்துக்கு பின், பில்கிஸ் பானு என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படுகொலை, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 11 பேருக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை மும்பை ஐகோர்ட்டு உறுதி செய்தது. அவர்கள் 15 ஆண்டுகாலம் சிறையில் கழித்த பிறகு, தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். அவர்களுக்கான தண்டனைக்குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. அதையடுத்து, இவ்விஷயம் தொடர்பாக பரிசீலிக்க பஞ்ச்மகால் மாவட்ட கலெக்டர் சுஜால் மாயாத்ரா தலைமையில் ஒரு குழுவை குஜராத் அரசு அமைத்தது. அந்த குழு, குறிப்பிட்ட கைதிகளின் ஆயுள் தண்டனையைக் குறைப்பதற்கு பரிந்துரைத்து மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதன் அடிப்படையில் 11 ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 11 பேரும் கோத்ரா கிளைச் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர். இவ்விவகாராம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.