;
Athirady Tamil News

தேனி மாவட்டத்தில் 21 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் நிறைவு: கலெக்டர் தகவல்..!!

0

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள ஊருணி பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்தது. அம்ரித் சரோவர் இயக்கத்தின் கீழ் இந்த ஊருணி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி ஊருணி தூர்வாரப்பட்டது. இதையடுத்து ஊருணி அருகில் கொடிக்கம்பம், பெயர் பலகை, அடிக்கல் போன்ற அமைப்புகள் அமைக்கப்பட்டது. அந்த கொடிக்கம்பத்தில் தேசியகொடி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். இதில், சுதந்திர போராட்ட தியாகி பாலகிருஷ்ணனின் மனைவி சீனியம்மாள் கலந்துகொண்டு தேசியகொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் கலெக்டர் முரளிதரன் கூறுகையில், “நாட்டில் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு 25 சதவீதம் அம்ரித் சரோவர் இயக்கப் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தேனி மாவட்டத்தில் குளங்கள், ஊருணிகள் என 67 நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 21 நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நீர்நிலைகளை பாதுகாக்க பயனர் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன” என்றார். நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.