;
Athirady Tamil News

கனமழையால் ஆறுகளில் வெள்ளம்- ஆந்திராவில் 100 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கிறது..!!

0

பருவ மழை காரணமாக கடந்த மாதம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமங்களில் மழை நீர் புகுந்தது. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். கிராமங்களில் இருந்த கால்நடைகள் மற்றும் பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆந்திரா, தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர். மழை பெய்வது படிப்படியாக குறைந்ததால் அப்பகுதி மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இதனால் கிருஷ்ணா, கோதாவரி மற்றும் துங்கபத்ரா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆறுகளில் வரலாறு காணாத அளவில் மழை வெள்ளம் சென்றதால் போலவரம், மற்றும் கபிலேஸ்வரம் பகுதிகளில் உள்ள 100-கணக்கான கிராமங்களில் மழை வெள்ளம் ஊர்களுக்குள் புகுந்தது. இடுப்பளவுக்கு மேல் மழை வெள்ளம் செல்வதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். பல்லாயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கியது. ஏற்கனவே கடந்த மாதம் மழை வெள்ளத்தால் பெரும் சேதத்தை சந்தித்த விவசாயிகள் மீண்டும் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.