;
Athirady Tamil News

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது..!!

0

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மோசமான தோல்வி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அவரை பதவியில் நீடிக்குமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி வற்புறுத்திய போதும் ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை. இதையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் அதிருப்தி தலைவர்கள் 23 பேர் கீழ் மட்டத்தில் இருந்து காங்கிரஸ் தலைவர் பதவி வரை உள்கட்சி தேர்தலை நடத்துமாறு சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். சட்டசபை தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்தும் அதிருப்தி தலைவர்கள் தொடர்ந்து காங்கிரஸ் தலைமையை விமர்சனம் செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி கீழ்மட்ட தேர்தல் முடிந்து விட்டன. காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 21-ந் தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந்தேதிக்குள் நடத்தப்படும் என்று காரிய கமிட்டி அறிவித்து இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். அவர் அப்பதவியை ஏற்க ஆர்வமில்லாமல் இருப்பதாக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். ராகுல் காந்தி மறுத்த போதிலும் அவர்தான் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என்று பெரும்பாலான நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். நேரு குடும்பத்தை சாராத வேறு நிர்வாகிகளை தலைவர் பதவியில் நியமிக்க முறையான ஆலோசனை எதுவும் நடக்கவில்லை. இந்த குழப்ப நிலைக்கு முடிவு கட்ட சோனியா காந்தியே தலைவர் பதவி யில் நீடிக்க வேண்டும் என்றும் சில தலைவர்கள் யோசனை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட தேசிய செயற்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி சோனியா காந்தி தலைமையில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அட்டவணை பற்றி முடிவு எடுக்கப்படும். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. காணொலியில் நடைபெறும் இந்த கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதி முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். செப்டம்பர் 20-ந்தேதிக்குள் புதிய தலைவரை தேர்ந்து எடுக்க வேண்டி இருப்பதால் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ராஜஸ்தான் முதல்-மந்திரியும், மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட்டை காங்கிரஸ் தலைவராக்க சோனியா காந்தி விருப்பம் தெரிவித்து உள்ளார்.

காந்தி குடும்பத்தை சேராத ஒருவர் தலைவராக வேண்டும் என்பதால் அசோக் கெலாட் பொருத்தமானவர் என்று சோனியா காந்தி கருதுகிறார். ஆனால் இதை மூத்த தலைவர்கள் சிலர் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அசோக் கெலாட் கூறும்போது, ராகுல் காந்தி தான் காங்கிரஸ் தலைவராக வேண்டும். தலைவர் பொறுப்பை ஏற்க அவரிடம் நாங்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.