;
Athirady Tamil News

அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும்- சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு..!!

0

சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும், சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் உள்ள அதிகாரங்கள் குறித்து ஆராயுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி ஏ.எம்.கான்வில்சர் தலைமையிலான அமர்வு அமலாக்கத்துறை கைது நடவடிக்கை எடுக்க தடையில்லை என்றும், சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை அதிகாரம் உண்டு என்று கடந்த ஜூலை 27-ந் தேதி தீர்ப்பு அளித்தது. மேலும் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்படும் வழக்கின் நகல் அறிக்கையை குற்றம்சாட்டப்படும் நபர்கள் அனைவருக்கும் அளிக்க வேண்டிய அவசியமில்லை. அந்த நபர் கைது செய்யப்படும்போது மட்டுமே அறிக்கையின் நகலை அளித்தால் போதும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொண்டதாக தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு கடந்த 22-ந்தேதி அறிவித்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும் போது, அமலாக்க துறையின் வழக்கு தகவல் அறிக்கையை குற்றம் சாட்டப்படும் நபருக்கு வழங்குவது உள்பட முதன்மையாக இரண்டு சிக்கல்களுக்கு மறு பரிசீலனை தேவை. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறையின் இரண்டு அதிகாரங்கள் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும். வழக்கு தகவல் அறிக்கையை வழங்கப்படாமல் இருப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு மறு ஆய்வு செய்யும். ஒருவர் குற்றமற்றவராக இருக்கலாம் என்ற அனுமானத்தை நிராகரிக்க அதிகாரம் உள்ளது என்பதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றனர். மேலும் இந்த மனு தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க கோரி நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.