;
Athirady Tamil News

முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்ட சிறுமியிடம் நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!

0

ஆவடியை அடுத்த மோரை, வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ். இவரது மனைவி சவுபாக்யா. இவர்களது 9 வயது மகள் டானியா. 4-ம் வகுப்பு படித்து வருகிறார். எல்லா குழந்தைகளும் போல டானியாவும் 3 வயது வரை இயல்பாக வளர்ந்தார். இதற்கிடையே, 3½ வயதுக்கு பின்னர் டானியாவின் முகத்தில் தோன்றிய சிறிய கட்டி அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. பல்வேறு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னர் சிறுமி டானியாவுக்கு அரிய வகை முகச்சிதைவு நோய் பாதிப்பு இருப்பது தெரிந்தது. நாட்கள் செல்ல செல்ல டானியாவின் ஒரு பக்க முகம் முழுவதும் சிதையத் தொடங்கியது. இதனால் பள்ளியிலும் டானியாவிடம் மற்ற சிறுமிகள் பாகுபாடு காட்டியதால் அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார். மேலும் டானியாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய போதுமான பண வசதி இல்லை. அவருக்கு அரசு உதவ வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமி டானியாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிறுமிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 23-ம் தேதி சிறுமி டானியாவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி டானியா மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவைச் சந்தித்து முதலமைச்சர் முக.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சிறுமி டானியாவை அன்புடன் நலம் விசாரித்து, புன்னகையைப் பரிமாறிக் கொண்டேன். வலுவான நம்முடைய மருத்துவக் கட்டமைப்பால் இது சாத்தியமாகி உள்ளது. இந்தப் புன்னகையைவிட எது இன்றைய நாளை முழுமையாக்கியிருக்க முடியும்? நம் மருத்துவக் கட்டமைப்பைக் காத்து, புன்னகைகளைப் பரிசாகப் பெறுவோம் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.