;
Athirady Tamil News

5ஆம் திகதி தொடக்கம் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!!

0

மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போது தயாராகிவிட்டதாகத் தெரிவித்த, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மாணவர்கள் இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியும் என்றார்.

இன்று (30) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

கடந்த 28ஆம் திகதி வெளியிடப்பட்ட பெறுபேறுக்கமைய, உயர்தரத்தில் சித்தியடைந்த 42,519 மாணவர்களுக்கு இவ்வருடம் பல்கலைக்கழக அனுமதி கிடைத்துள்ளதாகவும் இதில் மருத்துவ பீடத்துக்கு 2035 பேருக்கும் பொறியியல் பீடத்துக்கு 2238 பேரும் அனுமதி வழங்கப்படவுள்ளது என்றார்.

தாம் தெரிவு செய்யும் துறைகள் தொடர்பில் அறிந்துக்கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் வெளியிடப்படும் புத்தகமானது இந்த வாரம் வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட புத்தக நிலையங்களில் 3 மொழிகளிலும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதற்கமைய சனிக்கிழமை அந்தப் புத்தகத்தை குறித்த புத்தக நிலையங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிவரும் பிரதான பத்திரிகைகளில் புத்தக நிலையங்கள் தொடர்பான தகவல்கள் பிரசுரிக்கப்படும் என்றார்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் எனவும் மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க 03 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய 23ஆம் திகதி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி திகதி என தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்யும் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அரச தகவல் நிலையத்தின் 1919 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பல்கலைக்கழக தகவல் நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களான 0112695301 மற்றும் 0112695302 ஆகிய இலக்கங்களுக்கு காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தெரிவிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய 03 மொழிகளிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ள சிறு காணொளிகளை பார்வையிடலாம் என்றும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு முன்னர் குறித்த காணொளியைப் பார்வையிடுவது அவசியம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.