;
Athirady Tamil News

கர்நாடகாவில் சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: ஸ்ரீ முருகா மடாதிபதி அதிரடி கைது..!!

0

கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்தின் தலைமை மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். சித்ர துர்கா மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுருகா மடத்திற்கு சொந்தமான பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மடாதிபதி மீது மைசூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட இருந்தது. அதன் அடிப்படையில் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. மடாதிபதி சிவமூர்த்தி தரப்பில் ஜாமீன் கோரி சித்ரதுர்கா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தததாக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டுள்ளதாக கர்நாடகா காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் அலோக் குமார் தெரிவித்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தபின் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கர்நாடகாவின் மிகப்பெரிய லிங்காயத் சமுதாயத்திற்கு சொந்தமான ஸ்ரீமுருகா மடத்திற்கு ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டி.கே.சிவகுமார், கே.சி.வேணுகோபால் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

இந்த மடத்தின் தலைமை மடாதிபதி மீது பாலியல் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்யக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பது அம்மாநில அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மடாதிபதியை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.