;
Athirady Tamil News

விவசாயத்துறை திட்டங்கள் குறித்த களப்பார்வை மற்றும் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம்!! (PHOTOS)

0

விவசாயத் திட்டங்கள் குறித்த களப்பார்வை மற்றும் முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலர் க. மகேசன் தலைமையில் நேற்றையதினம் வியாழக்கிழமை மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடல் அரசின் விவசாய கொள்கைகளை அடைவதற்காக வட மாகாண சேவைக்குள் உள்ளீர்க்கப்பட்ட பட்டதாரிப்பயிலுனர்களைக் கொண்டு விவசாயத்திட்டங்களை ஊக்குவித்தல் மற்றும் அதன் செயற்பாடுகளை வினைத்திறனாக செய்வதனூடாக உணவுப்பாதுகாப்பை துரிதப்படு்தலை நோக்கமாகக் கொண்டு நடாத்தப்பட்டது.

யாழ்.மாவட்டத்தில் விவசாயத்துறை ஊடாக உணவுப்பாதுகாப்பை துரிதப்படுத்தல், ASMP திட்டங்கள், யாழ். மாவட்டத்தில் உள்ள விவசாயத் துறை அபிவிருத்தித் திட்டங்கள், FAO திட்டங்கள், மாவட்டத்தில் மேலதிகமாக மற்றும் பற்றாக்குறையாக காணப்படும் பொருட்களை உற்பத்தி செய்தல், கிராமிய வீட்டுத் தோட்டத்திட்டங்களை துரிதப்படுத்தல், சேதனப்பசளை உற்பத்தி, பிள்ளைகளுக்கான போசாக்கினை அதிகரி்க்கச் செய்வதற்கான நடவடிக்கைகள், புகையிரதத்திணைக்களத்தின் பாவனைக்கு உட்படுத்தாத நிலத்தை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்துதல், பாடசாலைகள் , கோயில்கள், தேவாலயங்கள் , வீடுகளில் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுதல் என்பன தொடர்பாக முன்வைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் விவசாயத் திட்டங்களை பட்டதாரிப்பயிலுனர்கள் சிறப்பாகச் செய்வதற்காக அவர்களுக்கு வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

இக் கலந்துரையாடலில் வட மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மேலதிக அரசாங்க அதிபர், மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் , மாகாண சேவை பிரதி ஆணையாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்,மாவட்ட விவசாயப் பணிப்பாளர், கல்வி வலயப் பணிப்பாளர்கள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , விவசாயதுறை சார் திணைக்களத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பட்டதாரிப்பயிலுனர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.