;
Athirady Tamil News

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது..!!

0

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வாக்காளர் பட்டியல்
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 01.08.2022 முதல் நடந்து வருகிறது. ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் தாங்களே நேரடியாக தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன், https://www.nvsp.in; https://votersportal.eci.gov.inஆகிய இணையதள முகவரி மூலமாகவும், Voters Helpline App என்ற செயலி மூலமும் பதிவு செய்து கொள்ளலாம்.

சிறப்பு முகாம்
இந்த நிலையில் வாக்காளர்கள் வசதிக்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1611 வாக்குச்சாவடிகளிலும் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடக்கிறது. முகாமில் வாக்காளர்கள் நேரடியாக தங்களது வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் அலைபேசி எண் போன்ற விவரங்களை படிவம் 6பி-ல் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் நேரடியாக சமர்ப்பிக்கவேண்டும். சிறப்பு முகாமில் பெறப்படும் ஆதார் எண் விவரங்கள் கருடா செயலி மூலம் உடனுக்குடன் வாக்குச்சாவடி நிலை அலுவலரால் பதிவேற்றம் செய்யப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறைவாக உள்ளதால், இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர்கள் அனைவரும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.