;
Athirady Tamil News

கொரோனா காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகள்- பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை தாக்கல்..!!

0

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் போது நிகழ்ந்த உயிரிழப்புகள் குறித்த ஆய்வு செய்த பாராளுமன்ற சுகாதார நிலைக்குழு, தனது 137 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அந்த அறிக்கையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் பற்றாக்குறையால் நிகழ்ந்த கொரோனா இறப்புகளை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் உன்னிப்பாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அரசு துறையிடம் இருந்து அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு எதிர்பார்ப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு சுகாதார உள்கட்டமைப்பில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்த போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தீர்ந்து விட்டது, ஒரு சில மணிநேரம் மட்டுமே ஆக்சிஜன் வினியோகிக்க முடியும் என்ற சூழல் நிலவியதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்புகளை தெரிவிக்கும்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வேண்டுகோள் விடுத்தது, எனினும் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உயிரிழப்புகள் எதுவும் இல்லை என பதிலளித்து இருந்தன.

மத்திய சுகாதார அமைச்சகம், மாநிலங்களின் ஒருங்கிணைப்புடன், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த உயிரிழப்பு குறித்து மறு தணிக்கை செய்து ஆவணப்படுத்த வேண்டும், அது அரசின் பொறுப்புள்ள உணர்வை வெளிப்படுத்துவதுடன், ஒரு முன்னெச்சரிக்கை கொள்கையை உருவாக்கி, இது போன்ற சுகாதார அவசரநிலை சூழலை எதிர் கொள்ள உதவும் என்றும் பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.