;
Athirady Tamil News

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் முதல் முறையாக மன்னர் சார்லஸ் உரை: தாயை நினைத்து உருக்கம்..!!

0

இங்கிலாந்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96) முதுமை தொடர்பான உடல்நல கோளாறுகளால் கடந்த 8-ந் தேதி ஸ்காட்லாந்து பால்மோரல் கோட்டையில் மரணம் அடைந்தார். ராணியின் மறைவை தொடர்ந்து பட்டத்து இளவரசராக இருந்த சார்லஸ் (வயது 73) மன்னர் ஆனார். இங்கிலாந்தின் புதிய மன்னர் 3-ம் சார்லஸ் என அழைக்கப்படுவார்.

மறைந்த ராணி எலிசபெத்துக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உறுப்பினர்களின் இரங்கலுக்கு மன்னர் சார்லஸ் நேற்று பதில் அளித்து பேசினார். அப்போது தனது தாயை நினைவு கூர்ந்து உருக்கமாக பேசினார்.

மன்னர் தனது உரையில் கூறியதாவது:- நமது ஜனநாயகத்தின் உயிர் மற்றும் சுவாசக்கருவி நாடாளுமன்றம். வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியது போல் ராணி எலிசபெத், வாழும் அனைத்து இளவரசர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தார். அவரை பின்பற்றி அரசியலமைப்பு நிர்வாகத்தின் விலைமதிப்பற்ற கொள்கைகளை நிலைநிறுத்துவேன். “என் அன்பான அம்மா” உடனான தொடர்புகள் நம்மைச் சுற்றிலும் காணப்படுகின்றன. வெள்ளி விழா நீரூற்று முதல் பழைய அரண்மனை முற்றத்தில் உள்ள சூரியக் கடிகாரம் வரை அவரது பொன்விழாவைக் குறிக்கும் அம்சங்கள் நிறைந்துள்ளன. இவ்வாறு மன்னர் சார்லஸ் கூறினார்.

இங்கிலாந்து மன்னராக நாடாளுமன்றத்தில் சார்லஸ் உரையாற்றியது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ராணி எலிசபெத்தின் உடல் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் நாளை (புதன்கிழமை) உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல் 19-ந் தேதி காலை 6.30 மணி வரை வைக்கப்படுகிறது. இதில் அஞ்சலி செலுத்துவோருக்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இங்கிலாந்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ராணி எலிசபெத்துக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்ப்பதால் மிக நீண்ட வரிசை காணப்படும். பல மணி நேரத்துக்கு, குறிப்பாக இரவு வரை நீங்கள் வரிசையில் நிற்க நேரிடும். வரிசை தொடர்ந்து நகர்ந்தவாறே இருக்கும் என்பதால், அமர்வதற்கு குறைவான வாய்ப்பே கிடைக்கும். ராணியின் உடல் வைக்கப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தை சுற்றிலும் சாலைகள் மூடப்படும்.

இதனால் பொது போக்குவரத்து இல்லாமல் நீண்ட தாமதம் ஏற்படலாம். அஞ்சலி செலுத்த வருவோரிடம் விமான நிலையத்தில் நடைபெறும் பரிசோதனைகள் போல சோதனையிடப்படும். ஒரு திறப்பு வைத்த சிறிய பை ஒன்று மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படும். நீண்ட காத்திருப்பு ஏற்படும் என்பதால் குடை, செல்போன் பவர் பேங்க் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்து வர வேண்டும்.

உணவு, பானங்கள் எடுத்து வரக்கூடாது. மலர்களோ அல்லது மெழுகுவர்த்தி, புகைப்படங்கள் போன்ற பிற பொருட்களையும் அஞ்சலிக்கு கொண்டு வரக்கூடாது. இந்த நிகழ்வின் கண்ணியத்தை மதித்து சரியான முறையில் நடந்து கொள்ளவும், வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்குள் அமைதியாக இருக்கவும் வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. இதைத்தவிர அங்கு ‘செல்பி’, புகைப்படம், வீடியோ பதிவு போன்றவற்றுக்கு தடை விதித்திருப்பதுடன், பட்டாசு, லேசர் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.