;
Athirady Tamil News

சாலை எங்கும் பள்ளம்- அங்கப்பிரதஷனம் செய்து எதிர்ப்பு தெரிவித்த நபரால் பரபரப்பு..!!

0

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ததை அடுத்து, சாலை எங்கும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்ட தரவுகளின்படி, 2018 மற்றும் 2020 க்கு இடையே 5,626 பேர் சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாலை விபத்துகளால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முறையே 2,015, 2,140 மற்றும் 1,471 என்று அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், பள்ளங்கள் நிறைந்த சாலைகளை விரைவில் சரிசெய்ய வலியுறுத்தி நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், சமூக ஆர்வலர் ஒருவர் காக்கி உடை அணிந்தபடி, பள்ளங்கள் நிறைந்த சாலையில் அங்கப்பிரதஷனம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. தென் கர்நாடகாவில் பிரபலமான உருளு சேவை எனப்படும் சடங்கு முறையை நபர் போராட்டமாக செய்துள்ளார். உருளு சேவை என்பது சமுதாய நலனுக்காக பலர் கோயில்களில் தரையில் உருளும் சடங்கு ஆகும்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை அடுத்து சம்பந்தப்பட்ட நபரின் பெயர் நித்யானந்தா ஒலக்காடு என்றும் அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.