;
Athirady Tamil News

வயிற்றில் காலால் மிதித்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த அவலம்- பெண் பலி..!!

0

ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டம் கத்தம்கூரு பகுதியை சேர்ந்தவர் சிரசு அகிலா (வயது 21). நிறைமாத கர்ப்பிணியான சிரசு அகிலாவுக்கு கடந்த 12-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது மாமியார் பூவுலம்மா, மருமகளை நலகொண்டா அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தார்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் சிரசு அகிலாவுக்கு மீண்டும் பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார். ஆனால் பணியில் இருந்த டாக்டர்கள் நர்சுகள் வலியால் துடிக்கும் பெண்ணிற்கு பிரசவம் பார்க்காமல் செல்போனில் பேசிய படியும், கேம் விளையாடிக் கொண்டு இருந்தனர். தற்போது அவர்களிடம் சென்ற இளம்பெண்ணின் மாமியார் மருமகள் வலியால் துடித்துக்கொண்டு இருக்கிறார். அவருக்கு பிரசவ பார்க்க வேண்டுமென கூறினார்.

ஆனால் அவர்கள் செல்போனிலேயே பிசியாக இருந்தனர். இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த பூவுலம்மா டாக்டர் மற்றும் நர்சுகளை திட்டினார். அவசரமாக பிரசவம் பார்க்க வேண்டும் என்றால் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல வேண்டியது தானே இங்கே எதற்கு கொண்டு வந்தாய் என திட்டியபடி வந்த நர்சுகள் சிரசு அகிலாவின் வயிற்றின் மீது காலை வைத்து அழுத்தியதாக கூறப்படுகிறது. பொதுவாக பிரசவ வலியால் துடிக்கும் பெண்களுக்கு டாக்டர்கள் கையால் வயிற்று பகுதியை அழுத்தி பிரசவம் பார்ப்பது வழக்கம். ஆனால் இவர்கள் காலால் மிதித்து பிரசவம் பார்த்ததை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இருப்பினும் சிரசு அகிலாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் உதிரப்போக்கு மட்டும் நிற்கவில்லை. இதையடுத்து சிரசு அகிலாவை மேல் சிகிச்சைக்காக ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குழந்தைக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிரசு அகிலாவின் கணவர் நலகொண்டா அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் லட்சுமி நாயக்கிடம் புகார் தெரிவித்தார். பணியில் இருந்த டாக்டர் மற்றும் நர்சுகள் மீது விசாரணை நடத்தப்படும். விசாரணையில் அவர்களது மீது தவறு இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.