;
Athirady Tamil News

நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகளால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்!! (வீடியோ, படங்கள்)

0

யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக பாதிக்கப்பட்ட நீர்த்தாங்கியுடன் இணைந்த கட்டட சிதைவுகள் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கல்முனை ஐஸ் வாடி கடற்கரை பகுதியில் உள்ள நீர்தாங்கி மற்றும் கட்டட சிதைவுகள் இவ்வாறு இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மருதமுனை நற்பிட்டிமுனை கல்முனை சாய்ந்தமருது பகுதி மீனவர்களுக்கு தேவையான ஐஸ்கட்டி தேவைகள் இவ்வாடி ஊடாகவே பூர்த்தி செய்யப்பட்டு வந்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இருந்த போதிலும் குறித்த பாரிய நீர் தாங்கியில் இருந்து எந்த ஒரு நீர் விநியோகமும் மேற்கொள்ளப்படாத நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள நீர்த்தாங்கி முழுமையாக பழுதடைந்துள்ளதுடன் ஐஸ் உற்பத்தி நிலையமும் செயலிழந்து காணப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நீர்த்தாங்கியில் காணப்பட்ட பாரிய வெடிப்புகள் அப்பிரதேச மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்ததுடன் அவை உடைந்து விழுந்துகொண்டுமிருந்தன. எனவே நீர்த்தாங்கியை அகற்ற உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் குறித்த நீர்த் தாங்கியில் சந்தேகத்திற்கிடமாக பல பொருட்கள் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.இதேநேரம் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மக்கள் குடியிருப்புக்கள் அதிகரித்து காணப்படுவதுடன் பள்ளிவாசல் மற்றும் கோயில்களுக்கு செல்பவர்களும் அச்சத்துடன் இப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

இது தவிர பழுதடைந்த நீர்த்தாங்கி மற்றும் கட்டட இடிபாடுகள் சிதைவுகள் இடிந்துவிழும் நிலையில் உள்ளதால் அருகில் விளையாட்டில் ஈடுபடும் சிறுவர்களும் பாதுகாப்பற்ற அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இதே போன்று மன்னார் கொந்தைப்பிட்டி கிராமத்தில் சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டு கைவிடப்பட்டிருந்த பாரிய நீர்த்தாங்கி ஒன்று கடந்த 2021 ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆந் திகதி தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு இராணுவத்தின் உதவியுடன் குண்டு வைத்து தகர்க்கப்பட்டிருந்தன.பயன்படுத்தப்படாத நிலையில் வெடிப்பு ஏற்பட்டு மக்களுக்கு அச்சுறுத்தலாக இந்த நீர்த்தாங்கி காணப்பட்டது.மக்கள் பாதுகாப்பாக வௌியேற்றப்பட்டு குறித்த நீர்த்தாங்கி தகர்க்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

DCIM100MEDIADJI_0506.JPG

You might also like

Leave A Reply

Your email address will not be published.