;
Athirady Tamil News

ராகுல் காந்தி பாத யாத்திரையில் இன்று மாற்று திறனாளிகள், மாணவிகள் பங்கேற்பு..!!

0

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு ஒற்றுமை பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய இந்த பாதயாத்திரை 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது.

இதில் கட்சியின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்று வருகிறார்கள். எர்ணாகுளம் மாவட்டத்தில் நேற்று பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி நேற்றிரவு தேசம் பகுதியில் நிறைவு செய்தார். இன்று அவரது 15-வது நாள் பாதயாத்திரை தேசம் பகுதியில் இருந்து அதிகாலை 6.30 மணிக்கு தொடங்கியது. தேசிய கொடி ஏற்றிவிட்டு பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தியுடன் மாற்று திறனாளிகள், பெண்கள், கல்லூரி மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுபோல வழிநெடுகிலும் பொதுமக்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ராகுல் காந்தியின் பாதயாத்திரை இன்று காலை 10 மணிக்கு காருக்குட்டி கப்பிலா சந்திப்பில் நிறைவடைகிறது. பின்னர் அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் பாதயாத்திரை இரவு 7 மணிக்கு சாலக்குடி பகுதியில் நிறைவடைகிறது. முன்னதாக ராகுல் காந்தி இன்று பகல் 1 மணிக்கு நிருபர்களை சந்திக்கிறார்.

அப்போது பாதயாத்திரை குறித்தும், காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும் கருத்து தெரிவிப்பார் என தெரிகிறது. இதற்கிடையே ராகுல் காந்தி நாளை ஒரு நாள் பாதயாத்திரைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சோனியா காந்தியை பார்க்க டெல்லி செல்வார் எனக்கூறப்படுகிறது. அப்போது டெல்லியில் காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்தும் அவர் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் எனக்கூறப்படுகிறது.

கேரளாவில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஒருநாள் பிரியங்கா காந்தியும் பங்கேற்பார் எனக்கூறப்படுகிறது. தற்போது ராகுல் காந்தியுடன் தினமும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகளும் பங்கேற்று வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.