;
Athirady Tamil News

கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்… புதிய பாதுகாப்பு விதிமுறை ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பு..!!

0

இந்தியாவில் 8 பேர் வரை பயணிக்கும் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், அந்த வாகனங்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்குவதற்கான புதிய பாதுகாப்பு விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜனவரி 14ம் தேதி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வரைவு அறிவிப்பு வெளியிட்டது. அதில், 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட M1 வகையைச் சேர்ந்த அனைத்து வாகனங்களுக்கும் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்படுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது. இந்த வரைவு அறிவிப்புக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த விதிமுறையை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில், 6 ஏர்பேக் பாதுகாப்பு விதியை அமல்படுத்துவதை அடுத்த ஆண்டு அக்டோபர் வரை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எனவே, புதிய விதிமுறை 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி நடைமுறைக்கு வரும். ஆட்டோமொபைல் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலி தடைகள் மற்றும் மேக்ரோ பொருளாதார சூழ்நிலையில் அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய மந்திரி நிதின் கட்கரி கூறி உள்ளார். பயணிகளை ஏற்றிச் செல்வதற்குப் பயன்படுத்தப்படும் குறைந்தபட்சம் நான்கு சக்கரங்களைக் கொண்ட மோட்டார் வாகனங்கள் ‘M’ என குறிப்பிடப்படுகிறது. ‘M1’ என்பது ஓட்டுனர் இருக்கை தவிர கூடுதலாக 8 இருக்கைகளை உள்ளடக்கிய, பயணிகள் மோட்டார் வாகனம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.