;
Athirady Tamil News

இளைஞர்களின் திறமையை பயன்படுத்தும் புத்தாய்வு திட்டம் -முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்..!!

0

அனைத்து துறைகளிலும் சிறந்த நல்லாட்சியை வழங்கும் முயற்சியாக 2 ஆண்டு காலத்துக்கான முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்தை (2022-2024) தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. திறன்மிகு இளைஞர்களின் ஆற்றலையும், திறமையையும் பயன்படுத்தி, நிர்வாக செயல்முறைகளின் செயல்திறனை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் கொள்கைகளின் சேவை வழங்கலை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டம் திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தை கல்வி பங்காளராக கொண்டு சிறப்பு திட்ட செயலாக்க துறையால் ஒருங்கிணைக்கப்படுகிறது. 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுனர்களுக்கு அரசின் உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களை கொண்டு 30 நாட்கள் வகுப்பறை பயிற்சி சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் வழங்கப்பட உள்ளது.

தொடங்கி வைத்தார்
சென்னையில் உள்ள அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியில் முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 30 இளம் வல்லுனர்களுக்கு, 30 நாட்கள் வகுப்பறை பயிற்சியுடன் கூடிய 2 ஆண்டு புத்தாய்வு திட்டத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இப்பணிகளை திறம்பட செய்ய அவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

மேலும், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்முயற்சிகளிலும், நல்லாட்சி வழங்குவதிலும் இளம் வல்லுனர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்தி முழுமையான அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

என்னென்ன பணிகள்?
இப்பயிற்சியின் நிறைவில், நீர்வளங்களை மேம்படுத்துதல், வேளாண் உற்பத்தி, விளைச்சல் மற்றும் சந்தைப்படுத்துவதற்குரிய இணைப்புகளை உருவாக்குதல், அனைவருக்கும் வீடு, கல்வித்தரத்தை உயர்த்துதல், சுகாதார குறியீடுகளை மேம்படுத்துதல், அனைவருக்கும் உள்ளடங்கிய சமூகம், உட்கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு, முறையான கடன், மரபு மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல் சமநிலை, தரவு நிர்வாகம் ஆகிய ஒவ்வொரு பிரிவிலும் தொடர்புடைய அரசு துறைகளுடன் 2 வல்லுனர்கள் வீதம் மொத்தம் 24 வல்லுனர்களும், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் கண்காணிப்பு பிரிவில் 6 வல்லுனர்களும் ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேலும், இளம் வல்லுனர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது, மதிப்பீடு செய்வது, இடையூறுகளை கண்டறிவது மற்றும் தரவுகளை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதற்கு உதவுவது ஆகியவை அவர்களது முக்கிய பணிகளாகும். இவை, மக்களுக்கு அரசு சேவை அளிப்பதில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய உதவும். 2 ஆண்டு புத்தாய்வு திட்டத்தை திருப்திகரமாக நிறைவு செய்யும் வல்லுனர்களுக்கு, பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் பொதுக்கொள்கை மற்றும் மேலாண்மையில் முதுகலை சான்றிதழ் வழங்கப்படும். ஏற்கனவே முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் மூலம் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொள்வதற்கு வாய்ப்பும் வழங்கப்படும்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதன்மை செயலாளர் த.உதயச்சந்திரன் வரவேற்று பேசினார். இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு திட்ட விளக்க உரையாற்றினார். திருச்சி பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன இயக்குனர் அசித் கே.பர்மா நன்றி கூறினார். இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, எஸ்.ரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், பழனிவேல் தியாகராஜன் மற்றும் த.வேலு எம்.எல்.ஏ., சிறப்பு திட்ட செயலாக்கத்துறை சிறப்பு செயலாளர் சீ.நாகராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான வல்லுனர் தேர்வுக்கு 25 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களில் 18 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
இறுதியாக நடந்த நேர்முகத் தேர்வில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.