;
Athirady Tamil News

இந்தியாவில் வீணாகிப்போன 10 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்..!!

0

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தியது. தொற்று பரவலால் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நோயாளி ஆனதோடு, ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். தொற்று பரவலை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டினர். அதன் பயனாக தயாரான தடுப்பூசிகள் மக்களுக்கு விரைவாக செலுத்தப்பட்டது. இதனால் தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்தியாவில் தயாரான கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெரும்பாலான மக்களுக்கு போடப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 218 கோடி டோஸ்களுக்கும் மேல் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் சிலர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்கு 2-வது தவணையும், இரு தவணை தடுப்பூசியும் செலுத்தியவர்களுக்கு முன் எச்சரிக்கை (பூஸ்டர்) டோஸ் தடுப்பூசியும் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தியாவில் தயாரான தடுப்பூசிகளில் கடந்த மாதம் இறுதி வரை சுமார் 10 கோடி டோஸ் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.225 என்று வைத்துக்கொண்டால் வீணான தடுப்பூசிகளின் சந்தை மதிப்பு மட்டும் ரூ.2,250 கோடி ஆகும். பொதுவாக கொரோனா அல்லாத தடுப்பூசிகள் 3 ஆண்டு கால ஆயுளை கொண்டிருக்கும். ஆனால் கொரோனா தடுப்பூசிகள் 9 முதல் 12 மாதம் வரை மட்டுமே காலஅவகாசம் கொண்டதாக உருவாக்கப்பட்டிருந்தன. இதுவும் தடுப்பூசிகள் வீணாவதற்கு ஒரு காரணியாக உள்ளது. இந்தியாவில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு அம்ரித் மகோத்சவ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக போட்டுக் கொள்ளலாம் என அறிவித்தது. அதுவரை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 8 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது இந்த சதவீதம் 27-ஐ தாண்டி உள்ளது. கடந்த 2-ந் தேதி நிலவரப்படி, மாநிலங்களில் சுமார் 21.9 மில்லியன் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாக நாள்தோறும் 2 முதல் 3 லட்சம் டோஸ் வரையிலான தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தப்படுகிறது. தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான சீரம் இன்ஸ்டிடி யூட் ஆப் இந்தியா நிறுவனம் கடந்த ஜூன்-ஜூலையில் சுமார் 200 மில்லியன் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இருப்பதாக கூறி இருந்தது. இவற்றில் பெரும்பாலானவை செப்டம்பர் மாதத்திற்குள் காலாவதி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், “நாங்கள் 2021-ம் ஆண்டு இறுதியில் ஒரு மாதத்திற்கு 250 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தோம். ஏற்றுமதி சந்தைகளில் கூட தேவையில்லாததால் திடீரென்று உற்பத்தியை நிறுத்த வேண்டி இருந்தது. இதனால் ஏற்கனவே மொத்தமாக தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளை நிறுத்தி வைக்க முடிவு செய்தோம். இல்லை என்றால் அவை காலாவதி ஆகிவிடும். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் காலாவதி ஆகும் டோஸ்களை பெற்று உள்ளோம். இனி ஒவ்வொரு மாதமும் சுமார் 20 மில்லியன் முதல் 30 மில்லியன் டோஸ்கள் வரை காலாவதி ஆகிவிடும் என்றார். மேலும் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டோஸ்கள் காலாவதி ஆகிவிடும்” என்று பூனவல்லா கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.