பிரபல போதைப்பொருள் வியாபாரி உள்ளிட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது!!
யாழ்ப்பாணம் , கோப்பாய் பொலிஸாரினால் பிரபல போதைப்பொருள் விற்பனையாளர் என அடையாளம் காணப்பட்ட நபர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தில் பரவலாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட உரும்பிராய் செல்வபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய நபரை நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் செல்வபுரம் பகுதியில் வைத்து 5 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் எனவும், தம்மால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் தலைமறைவாகி இருந்தார் எனவும் , கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்வியங்காட்டு பகுதியில் , 1கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸாரினால் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் எனவும் , கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”