;
Athirady Tamil News

இந்தியாவில் கடைசி மைல்கல்லில் உள்ள நபருக்கும் பயன்கள் சென்றடைய பாடுபட்டு வருகிறோம்: பிரதமர் மோடி..!!

0

ஐநா சபையின் இரண்டாவது உலக புவிசார் சர்வதேச மாநாடு ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி மூலம் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியாவில் கடைசி மைல்கல்லில் உள்ள, கடைசி நபருக்கும் அதிகாரமளிக்கும் வகையிலான ‘அந்தியோதயா’ என்னும் தொலைநோக்கில் நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

அமெரிக்காவின் மக்கள் தொகையை விட அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாமல் இருந்தனர். ஆனால் இப்போது 450 மில்லியன் பேருக்கு வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் மக்கள் தொகையை விட இருமடங்கு அதிகம் மக்களுக்கு, அதாவது 135 மில்லியன் மக்களுக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல, 110 மில்லியன் குடும்பங்களுக்கு சுகாதார வசதியும், 60 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது. யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதை இது காட்டுகிறது.

தொழில்நுட்பமும் திறமையும், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு முக்கிய இரண்டு தூண்கள். டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இந்தியா உலகின் முதலாவது நாடாக உள்ளது. சிறு வியாபாரிகள் கூட, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஏற்று கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். இதே போல தொழில்நுட்பம் மூலம் கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளுக்கு நாங்கள் உதவினோம். பொது வீட்டுவசதி திட்டம் சுமார் 24 மில்லியன் ஏழை குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கப்பட்டுள்ளது.

அவர்களில் சுமார் 70 சதவீதத்தினர் பெண்கள் அல்லது கூட்டு உரிமையாளர்கள். இந்தியா புத்தாக்க உணர்வு கொண்ட ஒரு இளம் நாடாகும். உலகின் மிகச்சிறந்த ஸ்டார்ட் அப் மையங்களில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. 2021ஆம் ஆண்டிலிருந்து யூனிகார்ன்(தனி) ஸ்டார்ட்அப்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. இது இந்தியாவின் இளம் திறமைக்கு ஒரு சான்றாகும். எங்களது விண்வெளித்துறை தனியார் பங்கேற்பிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5ஜிசேவை துவங்கப்பட்டுள்ளது. உலகளாவிய புவிசார் துறையின் பங்குதாரர்கள் ஒன்றிணைந்து, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வித்துறையினரை ஒருவருக்கொருவர் தொடர்புகொள்வதால், இந்த மாநாடு உலகளாவிய கிராமத்தை ஒரு புதிய எதிர்காலத்திற்கு வழிநடத்த உதவும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.