;
Athirady Tamil News

பெண்களை நரபலி கொடுத்த விவகாரம்- விசாரணைக்கு சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!

0

கேரளாவில் செல்வம் பெருக வேண்டும் என்பதற்காக 2 பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நரபலி கொடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த பத்மா (வயது 51). இன்னொருவர் கேரளாவின் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி (50). இவர்கள் இருவரையும் நரபலி கொடுத்ததாக முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பத்மா காணாமல் போன பகுதியில் இருந்து அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆன பகுதி வரையிலான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்ததின் மூலமே முகமது ஷபி மற்றும் பகவல் சிங், லைலா ஆகியோர் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதானவர்கள் பற்றி போலீசார் தெரிவித்த தகவல்கள் நெஞ்சை பதறவைப்பதாக இருந்தது. அதன்விபரம் வருமாறு:- நரபலி கொடுத்த 2 பெண்களையும் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து உள்ளனர். அங்கு தோண்டி பார்த்த போது பெண்களின் உடல்கள் துண்டு துண்டாக இருந்தது. இதுபற்றி கேட்டபோது பெண்களின் உடலை 56 துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டதாக கூறினர். மேலும் நரபலி கொடுக்கும் முன்பு பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இது எப்படி சாத்தியமானது என்று கேட்டபோது, நரபலிக்கு அழைத்து வந்த பெண்களை ஆபாச சினிமாவில் நடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்று கூறி அழைத்து வந்துள்ளனர்.

இதனால் அவர்களை நிர்வாணமாக இருக்க வேண்டும் என்றதும் அவர்களும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் நிர்வாணமாக படுத்துள்ளனர். அதன்பின்பு அவர்களின் கை, கால்களை கட்டி நிர்வாண பூஜை நடத்தி உள்ளனர். இந்த பூஜையை மந்திரவாதி முகமது ஷபி நடத்தி உள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியே இவர்தான். முகமது ஷபி, பெண்களை வசியம் செய்வதில் கில்லாடி. இவர் மீது பல பாலியல் வழக்குகள் உள்ளது. அதில் 70 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உண்டு. அந்த வழக்கில் இருந்து இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளிவந்துள்ளார். பெண்களை அழைத்து வந்து அவர்களை சித்ரவதை செய்வதில் முகமது ஷபி ஆர்வம் கொண்டவர். இவர் மீதான வழக்குகளை ஆய்வு செய்த போது இவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் அனைவரும் இது போன்ற சித்ரவதைக்கு ஆளாகி உள்ளனர்.

அதில் பெண்களின் மர்ம உறுப்பை அறுப்பது, மார்பகங்களை வெட்டி எடுப்பது போன்ற கொடுமைகளை செய்துள்ளார். அதுபோல பத்மா, ரோஸ்லி இருவரின் மர்ம உறுப்புகளை சேதப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். மேலும் முகமது ஷபி இதுபோல வேறு பெண்களை கடத்தி நரபலி கொடுத்துள்ளாரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். தற்போது கைதான 3 பேரும் 14 நாள் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம். அப்போது இந்த வழக்கு தொடர்பான மேலும் பல உண்மைகள் தெரியவரும் என நம்புகிறோம், முகமது ஷபி பேஸ்புக் மூலம் பலரை நண்பர்களாக்கி உள்ளார்.

பேஸ்புக்கில் பூக்களின் படத்தை வைத்து இதுபோல மகிழ்ச்சியாக இருக்கவும், செல்வம் கொழிக்கவும் பூஜைகள் செய்து தருவேன் என பதிவிட்டு உள்ளார். நரபலியில் ஈடுபட்டதாக கைதான பகவல் சிங் அவரது மனைவி லைலா இருவரும் பேஸ்புக் மூலமாகவே முகமது ஷபியுடன் பழக்கம் ஆகி உள்ளனர். எனவே முகமது ஷபியின் பேஸ்புக் தகவல்கள் அனைத்தையும் கைப்பற்றி அதனை ஆய்வு செய்ய உள்ளோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கொச்சி போலீஸ் கமிஷனர் நாகராஜ் உள்பட போலீஸ் உயர்அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.