;
Athirady Tamil News

பத்மா உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும்: மகன்கள் முதல்-மந்திரிக்கு கோரிக்கை..!!

0

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மாவின் மகன்கள் செல்வராஜ், சேட் ஆகியோர் எர்ணாகுளத்தில் தங்கி உள்ளனர். அவர்கள் தாயார் பத்மாவின் உடலை அங்கிருந்து சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளனர். பத்மா நரபலி கொடுக்கப்பட்ட தகவல் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் இன்னும் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை. பத்மாவின் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு இருப்பதால், அவை பத்மா உடல் தானா? என்பதை கண்டுபிடிக்க அவரது மகன்களிடம் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்முடிவுகள் வந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த நிலையில் பத்மாவின் மகன் செல்வராஜ், கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் தனது தாயாரின் எஞ்சிய பாகங்களை தந்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும். கடந்த 11-ந் தேதி முதல் எர்ணாகுளத்தில் தான் இருக்கிறோம். எங்களது டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்தபின்னர்தான் உடலை ஒப்படைப்போம் என போலீசார் கூறுகிறார்கள். அதனை விரைவாக முடித்து உடலை ஒப்படைக்க கேரள அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதுபோல தமிழக முதல்வருக்கும் பத்மாவின் மகன்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.