;
Athirady Tamil News

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுமாறு கூறினர் – மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டை மறுத்த சிபிஐ..!!

0

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது.

சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார். டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மணீஷ் சிசோடியா, சி.பி.ஐ. அலுவலகத்தில் அதிகாரிகளைச் சந்தித்தேன். முழு வழக்கும் போலியானது. இன்றைய 9 மணி நேர விசாரணையில் அனைத்தையும் புரிந்து கொண்டேன். இந்த வழக்கு என் மீதான எந்த ஊழலையும் விசாரிப்பதற்காக அல்ல.

ஆனால் டெல்லியில் ஆபரேஷன் தாமரையை வெற்றிகரமாக்குவதற்காக மட்டுமே இந்த விசாரணை. ஆம் ஆத்மியை விட்டு பா.ஜ.க.வுக்கு வரமாட்டேன் என்றேன். என்னை முதல்வராக்குவோம் என்று சொன்னார்கள் என தெரிவித்தார். இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேருமாறு கூறியதாக டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா கூறிய குற்றச்சாட்டை சி.பி.ஐ. மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், இந்த சோதனை தொழில்முறை மற்றும் சட்டபூர்வமான முறையில் நடத்தப்பட்டது என்பதை மீண்டும் சி.பி.ஐ. வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.