;
Athirady Tamil News

அறநிலையத்துறை ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து -ஐகோர்ட்டு உத்தரவு..!!

0

சென்னை சூளையில் உள்ள சொக்கவேல் சுப்பிரமணியர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை குத்தகைக்கு எடுத்த தனிநபர்கள், நீண்டகாலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் சூளையை சேர்ந்த சுகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக விரைவாக நடவடிக்கை எடுக்க கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இந்த உத்தரவை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. அதையடுத்து ஐகோர்ட்டில், அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோருக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சுகுமார் தாக்கல் செய்தார்.

அபராதம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கோர்ட்டு உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்துக்கான காரணங்களை அதிகாரிகள் முறையாக தெரிவிக்கவில்லை. எனவே, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுகுமார் தரப்பில் வக்கீல் எஸ்.நடராஜன் ஆஜராகி வாதிட்டார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, கோவில் சொத்தில் இருப்பவர்களை வெளியேற்ற இறுதி அறிவிப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

ரத்து
அதேசமயம், அதிகாரிகள் தரப்பிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.