;
Athirady Tamil News

சந்திரயான்-3 விண்கலம் ஏவப்படும் தேதியை அறிவித்தார் இஸ்ரோ தலைவர் சோம்நாத்..!!

0

சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட விண்கலம், படிப்படியாக 5 முறை புவி வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. இதன்பின்பு அதே ஆண்டில் செப்டம்பர் 2-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணித்தது. எனினும், நிலவிற்கு 2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபோது விக்ரம் லேண்டரின் தகவல் துண்டிக்கப்பட்டது. நிலவின் இருண்ட பக்கத்தில் விழுந்த லேண்டரை விஞ்ஞானிகளால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. இந்த நிலையில், நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் உருவாக்கும் பணி நடந்து வந்தது. இதில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமுடன் ஈடுபட்டு வந்தனர். எனினும், கொரோனா பெருந்தொற்று, அதனை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் தொடர்ச்சியாக திட்டம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து இன்று அதிகாலை ஜி.எஸ்.எல்.வி.-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அதன்படி, இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒன்வெப் நிறுவனத்தின் 6 டன் எடையுள்ள 36 செயற்கைகோள்களை முதல் முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவி உள்ளது. இதனை தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சோமநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சந்திரயான்-3 விண்கலம் ஏறக்குறைய தயாராகி விட்டது. இறுதியான ஒருங்கிணைப்பு பணி மற்றும் பரிசோதனை ஆகியவை ஏறக்குறைய நிறைவடைந்து விட்டது. எனினும், சில பரிசோதனைகள் இன்னும் முடிவடையாமல் உள்ளன. அதனால், அவற்றை சிறிது காலத்திற்குள் செய்து முடிக்க நாங்கள் விரும்புகிறோம். பிப்ரவரி மற்றும் ஜூன் என பொருந்த கூடிய இரு காலங்களில் ஜூனை (2023-ம் ஆண்டு) தேர்வு செய்து அதனை விண்ணில் செலுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார். விண்ணில் அனுப்பிய 36 செயற்கைக்கோள்களில் 16 செயற்கைக்கோள்கள் தனியாக பிரிந்து பாதுகாப்புடன் சென்றுவிட்டன. மீதமுள்ள 20 செயற்கைக்கோள்கள் அடுத்து பிரிந்து செல்லும் என்றும் அவர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.