;
Athirady Tamil News

140 எம்.பி.க்கள் ஆதரவு; இங்கிலாந்து பிரதமர் ஆவாரா ரிஷி சுனக்..!!

0

இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் 5-ந்தேதி லிஸ் டிரஸ் பொறுப்பேற்று கொண்டார். அது முதல் டிரஸ்சுக்கு அடுத்தடுத்து நெருக்கடிகள் ஏற்பட்டன. கடந்த 10 நாட்களில் இங்கிலாந்து அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. டிரஸ்சின் அமைச்சரவையில் நிதி மந்திரியாக இருந்த குவாசி வார்தெங் கடந்த 14-ந்தேதி நீக்கப்பட்டு, ஜெரேமி ஹன்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதற்குள், உள்துறை மந்திரியான இந்திய வம்சாவளி பெண் சுவெல்லா பிரேவர்மென் கடந்த 19-ந்தேதி இரவில் திடீரென பதவி விலகினார். இதன்பின்னர், அரசில் தலைமை பதவி வகிக்கும் வெண்டி மோர்ட்டன் மற்றும் துணை கொறடாவான கிரெய்க் விட்டேக்கர் ஆகியோர் பதவி விலகி விட்டனர் என கூறப்பட்டது. இதனால், இங்கிலாந்து அரசியலில் சலசலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த 20-ந்தேதி லிஸ் டிரஸ் பிரதமர் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சி ஏற்படுத்தினார். அவரது 44 நாட்கள் பிரதமர் பதவி முடிவுக்கு வந்தது. நாட்டின் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் விலையை உயர்த்த திட்டம், புலம்பெயர்வோர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் இந்த பதவி விலகலுக்கு காரணங்களாக கூறப்படுகின்றன.

இதனையடுத்து, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை (பிரதமர்) தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தொடங்கின. இந்த போட்டியில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், முன்னாள் நிதி மந்திரியான இந்திய வம்சாவளி ரிஷி சுனக் ஆகியோர் இருந்தனர். எனினும், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு சில மணிநேரம் இருக்கும்போது, போட்டியில் இருந்து விலகும் முடிவை போரிஸ் ஜான்சன் வெளியிட்டார். ரிஷி சுனக்கிற்கு நாடாளுமன்றத்தில் 142 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது.

இந்த போட்டியில் பெண் தலைவரான பென்னி மார்டண்ட் என்பவரும் இறங்கியுள்ளார். அதற்கான பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு 29 எம்.பி.க்களின் ஆதரவு உள்ளது. இதனால், ரிஷி சுனக் மற்றும் பென்னி மார்டண்ட் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் 100 எம்.பி.க்களின் ஆதரவை பென்னி பெற வேண்டும். அப்படி அவர் பெற தவறும்பட்சத்தில், ரிஷி சுனக் இன்று மாலையே பிரதமர் ஆகி விடுவார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் 357 எம்.பி.க்கள் உள்ளனர்.

இங்கிலாந்தின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் பலரது ஆதரவு யாருக்கு உள்ளது? என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும். 2 பேர் போட்டியிடுகிற நிலையில், ஒருவேளை இணையவழி ஓட்டுப்பதிவுக்கான வாய்ப்பு ஏற்பட்டால், 1.70 லட்சம் பேர் அதற்கான வாக்கு பதிவில் கலந்து கொள்வார்கள். அதன் முடிவு வருகிற 28-ந்தேதி தெரிய வரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.