;
Athirady Tamil News

யால விவகாரம்: 9 பேருக்கு பிணை!!

0

யால தேசிய சரணாலயத்துக்குள் வாகனங்களைச் செலுத்தி வன விலங்குகளை துன்புறுத்திய சம்பவம் தொடர்பில், யால சரணாலய அதிகாரிகளிடம் இன்று (26) சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு திஸ்ஸமஹாராம நீதவான் தரிந்து சமிர சில்வா, இன்று (26) கட்டளையிட்டார்.

கடந்த சனிக்கிழமை 33 ஜீப்களில் சுமார் 100 பேருடன் யால சரணாலயத்துக்குள் பிரவேசித்த குழுவினர், வாகனங்களில் வட்டமடித்தும் முறையற்ற விதத்தில் வாகனங்களை செலுத்தியும் வன விலங்குகளை துன்புறுத்தியிருந்தனர்.

இது தொடர்பில் 7 வாகனங்கள் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், 7 சாரதிகள் மற்றும் வீடியோ எடுத்த இருவர் அடங்கலாக 9 பேர் சரணடைந்துள்ளனர்.

யால சரணாலயத்தில் டிபெண்டர்கள், ஜீப்களில் அவர்கள் பயணித்த விதம் தொடர்பான பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியானதையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய திணைக்களத்திடம் உள்ள ஆதாரங்களைக் கொண்டு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக திணைக்களம் தெரிவித்திருந்தது.

இதேவேளை, குறித்த குழுவினருடன் சென்ற வனவிலங்கு அதிகாரி மற்றும் வழிகாட்டிகள் அறுவர் உட்பட 7 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் விசாரணைகளையும் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்காத அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்த மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சந்திரா ஹேரத் தீர்மானித்துள்ளார்.

மேலும், குறித்த நபர்கள் மற்றும் வாகனங்கள், இலங்கையிலுள்ள எந்த தேசிய பூங்காவுக்கும் 3 வருடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நபர்களும் அவர்கள் பயணித்த வாகனங்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.