;
Athirady Tamil News

மின் கட்டணத்துடன் 2.5% பங்களிப்பு வரி!!

0

ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் மாதாந்த மின் கட்டணத்துடன் 2.5 சதவீத சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி சேர்க்கப்படும் என்று இலங்கை மின்சார சபை, இன்று (27) தெரிவித்தது.

சமூக பாதுகாப்பு வரிச் சட்டத்துக்கு அமைய, இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகமானது, 2.5% சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு உட்பட்டது என்று நிதியமைச்சு அறிவித்தமைக்கு அமைய இம்மாதம் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில், சபை மேற்படி வரியை அறவிடவுள்ளது.

மின்சார பாவனைக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு நிதியமைச்சுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

எனினும், குறித்த சட்டத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் இந்த வரிக்கு உட்பட்டது என்று நிதியமைச்சினால் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 1ஆம் திகதி முதல் அமுல்படுதப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி காரணமாக, பல்வேறு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதுடன், பொருட்களின் விலைகளும் உயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.