;
Athirady Tamil News

பிளவு கொண்ட அரசியல் போக்கில் நீடித்துச் செல்ல முடியாது !!

0

மலையக மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மலையகத்தின் ஏனைய அரசியல் தரப்புகளுடன் புரிந்துணர்வுடனும், நல்லெண்ணத்துடனும் செயற்படுவதற்கு தான் தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் பராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மலையகக் கட்சிகள், வெறுப்பு

அரசியலுடன் தொடர்ந்தும் பயணம் செய்வது உகந்ததல்ல என்றார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பங்கேற்குமாறு மலையக அரசியல் கட்சிகளும், தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்களும் மனமுவந்து தனக்கு அழைப்பு விடுத்ததன் காரணமாக​வே தான் அந்நிகழ்வில் பங்கேற்றதாகத் தெரிவித்துள்ளார்.

அழைப்பு விடுத்தால் அதனை ஏற்றுக் கொண்டு செல்வதுதான் மனித நாகரிகம். நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்ற உணர்வு எமக்குள் இருக்க வேண்டும் என்பது தனது அவாவாகும்.

தான் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு அங்கு சென்றமை குறித்து பலருக்கு பலவித வேறுபட்ட உணர்வுகள் இருக்கலாம். ஆனால் எமது சமூகத்தை முன்னேற்றுவதற்கு ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியம் என்பதை நாம் மறக்கலாகாது. அதற்கான ஆரம்பமே இதுவாகும்.

இதேவேளை நான் சஜித் பிரேமதாச மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோருடன் இணைந்து அரசியல் செய்வதற்காக அந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை. மாறாக புரிந்துணர்வுடன் கூடிய மலையக அரசியல் ஒருமைப்பாட்டுக்காகவே கலந்துக்கொண்டேன்.

என்பதை ஆணித்தனமாக இவ்விடத்தில் குறிப்பிடுகிறேன்.

அதேநேரத்தில் வெறுப்பையும், எதிர்ப்பையும் வைத்து கொண்டு இனிமேலும் அரசியல் செய்ய முடியாது. அவ்வாறான பிளவு கொண்ட அரசியல் போக்கில் நாம் நீடித்துச் செல்ல முடியாது என்பது தனது குறுகிய கால அரசியல் வாழ்வில் தான் கற்றுக் கொண்ட அனுபவம் ஆகும்.

ஆகையால் அன்பினாலும் நல்லிணக்கப்பாட்டினாலுமே எமது மக்களுக்கான நன்மைகளை சாத்தியப்படுத்த நாம் அனைவரும் பயணிக்க வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.