;
Athirady Tamil News

மக்களவை தேர்தலில் பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவாலாக இருப்பார்: அசோக் கெலாட் நம்பிக்கை..!!

0

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் கூறியதாவது:- முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ மூலம் முன்னிலைப்படுத்தி வரும் விஷயங்கள் பொது மக்களுடன் தொடர்புடையவை. அவரது செய்தி நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றடைகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடக்கூடிய தகுதி ராகுல் காந்திக்கு உள்ளது. ஆனால் ஒரு பொதுவான நபரை அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து முடிவுசெய்யும். குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் அரசுக்கு எதிரான அலை உள்ளது. காங்கிரஸ் வேகமாக முன்னேறி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். குஜராத் மாநிலத்தில் இப்போதுதான் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 175 சட்டமன்றத் தொகுதிகளைக் கடந்து ஐந்து யாத்திரைகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என்று நம்புகிறேன். இவ்வாறு அசோக் கெலாட் கூறினார். குஜராத்தில் ஆம் ஆத்மியின் தாக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஆம் ஆத்மி கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. ஊடகங்களைக் கைப்பற்றியுள்ளது. இதைத் தவிர வேறு எதுவும் இல்லை” என்று அசோக் கெலாட் தெரிவித்தார். தற்போது நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் ராகுல் காந்தி பிரசாரம் செய்யாதது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கெலாட், “ராகுல் காந்தியின் பாதயாத்திரை பயணம் இருப்பதால் பல மாநிலங்களுக்கு செல்ல முடியவில்லை. காரணமே இல்லாமல் அதை பிரச்சனை ஆக்க பார்க்கிறார்கள்” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.