;
Athirady Tamil News

இமாச்சல பிரதேசத்தில் நாளை வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!!

0

68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் திட்டமிட்டு இருந்தது. அதன்படி இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகள் களத்தில் நிற்கின்றன. இதனால் மும்முனை போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலை ஓய்ந்தது. இதையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பா.ஜனதாவும், காங்கிரசும் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

ஆம் ஆத்மி 67 தொகுதிகளில் களத்தில் நிற்கிறது. இது தவிர மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்டு ஒரு தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. மற்றவை 45 தொகுயில் நிற்கின்றன. சுயேட்சைகள் 99 பேர் போட்டியிடுகிறார்கள். 412 வேட்பாளர்களில் 24 பேர் பெண்கள் ஆவார்கள். இமாச்சல பிரதேசத்தில் 55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் உள்ளனர். இதில் முதல்முறை வாக்காளர்கள் 43,173 பேர் ஆவார்கள். 68 தொகுதியில் 17 எஸ்.சி. பிரிவினருக்கானது. 3 தொகுதி எஸ்.டி. பிரிவினருக்கானது. மொத்தம் 7,881 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 157 வாக்குப்பதிவு மையம் பெண்கள் மட்டுமே வாக்களிக்க கூடியதாகும். கடந்த தேர்தலை விட கூடுதலாக 356 வாக்கு சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்துள்ளது. இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை நீண்ட காலமாக ஒரு கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதாவும், ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரசும் போராடி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.