;
Athirady Tamil News

ராகுல் காந்தியின் பாத யாத்திரைக்கு 250 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் ஆதரவு..!!

0

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை பயணம் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது பாத யாத்திரைக்கு 250 எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் அடங்கிய குழு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த குழுவை சேர்ந்த கணேஷ் தேவி, பிரதிபா ஷிண்டே மற்றும் லக்ஷ்மிகாந்த் தேஷ்முக் உள்ளிட்ட எழுத்தாளர்கள் குழு, கலம்நூரி பகுதியில், ராகுல்காந்தியை சந்தித்து கலந்துரையாடியது. மேலும் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை ஒன்றையும் வழங்கியது.

இது குறித்து பேசிய மராத்தி எழுத்தாளர் லக்ஷ்மிகாந்த் தேஷ்முக், பாஜகவின் இந்துத்துவா கொள்கை ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறினார். சில அரசியல் கட்சிகள் மென்மையான இந்துத்துவாவை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நாடு அனைத்து சமூகங்களுக்கும் சொந்தமானது என்பதால் பிற சமூகங்களை பற்றியும் காங்கிரஸ் பேச வேண்டும் என்று ராகுலிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டார். மக்களின் முன்னேற்றம், கண்ணியம் மற்றும் மகிழ்ச்சிக்கு சுதந்திரம் இன்றியமையாதது என்றும், கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியம் சுதந்திரமான சூழலில் மட்டுமே மலரும் என்றும், சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் இப்போது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன என்றும் தேஷ்முக் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.