;
Athirady Tamil News

திருக்கோணேஸ்வரர் சூழல் புனிதப் பிரதேசம்: சாவகச்சேரிப் பிரதேச சபையில் நிறைவேறியது தீர்மானம்!!

0

திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழலைப் பௌத்தமயமாக்கலில் இருந்து விடுவித்துப் புனித பிரதேசமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் எனச் சாவகச்சேரிப் பிரதேச சபையில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சாவகச்சேரிப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று வியாழக்கிழமை(17.11.2022) தவிசாளர் கந்தையா வாமதேவன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதேச சபை உறுப்பினர் வைத்திலிங்கம் ஜெகதாஸினால் கொண்டுவரப்பட்ட பிரேரணையே இவ்வாறு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொல்பொருள் என்று கூறிக் கொண்டு பல்லாயிரம் ஆண்டு கால சைவத்தமிழ் வரலாறுகளை மாற்றி அமைக்கும் நடவடிக்கைகளால் இன,மத முரண்பாடுகளைத் தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்த முனைகின்றது இதனை அனுமதிக்க முடியாது.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயச் சூழலைப் பௌத்த மயமாக்கும் சதித் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆகவே, உடனே இதனைத் தடுத்து நிறுத்தி இந்தப் பிரதேசம் புனித பிரதேசமாக மாற்றப்பட வேண்டும்.

இலங்கையின் மிகவும் தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற தலமாக விளங்கும் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயம் சைவத்தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்று நிலம்.

அந்த ஆலயம் சூழ்ந்த இடங்களில் சட்டவிரோதமாக கடைகள் அமைக்கப்பட்டுத் தொல்லியல் திணைக்களத்தினால் சில தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை வேதனை அடைய வைத்திருக்கின்றது.

தொல்பொருள் திணைக்களம் ஒரு ஆலய விடயத்திற்குள் தலையிடுகின்றது. என்றால் நிச்சயம் அங்கு ஒரு இரகசிய வேலைத்திட்டம் இருக்கும். இந்தப் பின்புலத்தை நோக்கினால் திருக்கோணேஸ்வரர் ஆலயத்தை உள்ளடக்கியவாறு உல்லாசத்துறை அபிவிருத்தி எனும் பெயரில் தொல்பொருள் திணைக்களம் நுழைவதானது நீண்டகால அடிப்படையில் கோணேசர் ஆலயத்தை விழுங்கும் ஒரு செயற்பாடு தான்.

ஏனெனில், உல்லாசத்துறை அபிவிருத்தியைச் செய்வதற்குப் பல்வேறு இடங்கள் இருக்கின்ற போது குறிப்பாக கோணேசர் ஆலயப் பகுதியைத் தெரிவு செய்ய வேண்டிய அவசியமென்ன? எனவே, அங்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் உடன் நிறுத்தப்படவேண்டும்.

கோணேசர் கோயிலில் திட்டமிட்டு நிறுவப்படும் பௌத்த மயமாக்கல் சிங்களக் குடியேற்றங்கள் என்பனவற்றைத் தடுத்து ஆலய வளாகத்தைச் சூழ உள்ள பிரதேசங்களைப் புனித பிரதேசமாக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தக் கண்டனத் தீர்மானத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.