;
Athirady Tamil News

இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவ தயார் – நைஜீரியா அரசு தகவல்..!!

0

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியா கச்சா எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி இங்கு கச்சா எண்ணெய் ஏற்றி வருவதற்காக நார்வே கப்பல் ஒன்று கினியா நாட்டுக்குச் சென்றது. அக்கப்பலில் இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள் உள்பட 26 பேர் இருந்தனர்.

நடுக்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றுவதற்காக ஏற்கனவே பல கப்பல்கள் காத்திருந்தன. அவற்றுடன் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலும் எண்ணெய் ஏற்ற காத்திருந்தது. அப்போது கடல் கொள்ளையர்களின் கப்பல் அந்த வழியாக வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்திய மாலுமிகள் கப்பலை பாதுகாப்பான பகுதி நோக்கி செலுத்தினர்.

அப்போது அங்கு வந்த கினியா கடற்படை கப்பல் இந்திய மாலுமிகள் இருந்த கப்பலை தடுத்து நிறுத்தியது. பின் அதிலிருந்த இந்திய மாலுமிகள் உள்பட 26 பேரையும் சிறைபிடித்தனர். இதில் கேரளாவை சேர்ந்த 3 மாலுமிகளும் உள்ளனர். நார்வே கப்பல் சிறைபிடிக்கப்பட்ட தகவல் கப்பல் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் கினியா கடற்படை சிறைபிடித்த எண்ணெய் கப்பலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, இந்திய மாலுமிகள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது பற்றிய தகவல்கள் இந்திய தூதரகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் கினியா நாட்டுடன் பேசி இந்திய மாலுமிகளை மீட்கும் நவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், 3 மாதமாக அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள மாலுமிகள் தற்போது அண்டை நாடான நைஜீரியாவிடம் ஒப்படைக்கப்பட்டு, அங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த மாலுமிகளை மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்திய மாலுமிகள் விவகாரத்தில் உதவிட தயார் என நைஜீரியா அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்ற அந்நாட்டு உள்துறை மந்திரி ஆக்பெனி ரவுப் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாலுமிகள் விடுதலை விவகாரத்தில் இந்திய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்த பிரச்சினையைத் தீர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என அனைத்து இந்தியர்களுக்கும் உறுதியளிக்கிறோம் என தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.