;
Athirady Tamil News

சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டது- அமைச்சர் ரோஜா கடும் தாக்கு..!!

0

ஆந்திரா மாநிலம், மங்களகிரியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் மீன் மற்றும் இறால் வளர்ப்பு விவசாயிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளை தங்கள் வலையில் வீழ்த்தி உள்ளனர். மீன்களுக்கு வழங்கப்படும் உணவுகள் மீதும் இந்த அரசு ஜெட் வரி விதித்ததால் மாதத்திற்கு அரசுக்கு ரூ.750 கோடி வருவாயாக கிடைக்கிறது. ஆனால் இறால் மீன்களின் விலையை கிலோவுக்கு ரூ.240-ல் இருந்து 210 ரூபாயாக இந்த அரசு குறைத்து விட்டது. இதனால் விவசாயிகள் எப்படி பிழைப்பார்கள் என எண்ணிப் பார்க்கவில்லை. கூட்டத்திற்கு ஆதோனி, எமிகானூர், கடப்பா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இருந்து அதிக அளவு விவசாயிகள் கலந்து கொண்டதால் அந்த மாவட்டத் தலைவர்களை ஒய்.எஸ்.ஆர். காங்கிரசிலிருந்து ஜெகன்மோகன் நீக்கி விட்டார். வரும் தேர்தலில் தெலுங்கு தேசம் ஆட்சியை பிடிக்கும். குப்பம் தொகுதி மட்டுமல்லாமல் ஜெகன்மோகன் ரெட்டி தொகுதியான புலி வேந்தலா உட்பட 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆந்திர மாநிலம் சீரழிவை சந்திக்க நேரிடும் என்றார். சந்திரபாபு நாயுடு பேச்சுக்கு அமைச்சர் ரோஜா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக குண்டூரில் நடந்த ஜெகன்மோகன் ரெட்டி பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதாவது:- தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு வயதாகி விட்டதால் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் ஆந்திராவுக்கும், மீன் வளர்ப்பு விவசாயிகளுக்கும் எந்த நன்மையும் செய்யவில்லை. எதிர்க்கட்சியாக உள்ளதால் எங்கள் ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். மீண்டும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.