;
Athirady Tamil News

14-ம் ஆண்டு நினைவு தினம்: உலகை உலுக்கிய தாக்குதல்..!!

0

பாகிஸ்தானின் லக்‌ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கும்பல் கடல்மார்க்கமாக மும்பை நகருக்குள் ஊடுருவி தங்களது கோரமுகத்தை காட்டினர். இந்த தாக்குதலால் மும்பை மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே அதிர்ந்தது. வெளிநாட்டவர்களும் இந்த தாக்குதலில் சிக்கியதால் உலகையும் உலுக்கியது. 2008-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி பயங்கரவாதிகள் 10 பேர் பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து கடல் வழியாக வந்தனர். அவர்கள் வரும் வழியில் மீன்பிடி படகில் இருந்தவர்களை கொன்று விட்டு அந்த படகு மூலம் மும்பைக்கு வந்தனர். சுற்றுலா பயணிகள் போல வந்த அவர்கள் மும்பை கப்பரடே, பத்வார் பார்க் பகுதியில் 26-ந் தேதி மாலை கரை ஏறினர். பின்னர் அவர்கள் குழுக்களாக பிரிந்து தென்மும்பையில் உள்ள முக்கிய இடங்களில் மிருகத்தனமான தாக்குதலை நடத்த தொடங்கினர். இதில் பயங்கரவாதிகள் அஜ்மல் கசாப் மற்றும் அபு இஸ்மாயில் ஆகியோர் மும்பை சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் நடத்திய தாக்குதல் மிகவும் மோசமானதாக பார்க்கப்படுகிறது. ரெயில் நிலையத்தில் வேலை முடிந்து வீடு திரும்ப காத்து இருந்த அப்பாவி மக்களை காக்கா, குருவிகளை போல ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளினர். இந்த ரெயில் நிலையத்தில் 15 நிமிடங்களில் அவர்கள் 58 பேரை கொன்று குவித்தனர். 104 பேர் படுகாயமடைந்தனர். இதுதவிர ஒபராய் டிரிடென்ட் ஓட்டல், தாஜ் ஓட்டல், லியோபோல்டு கபே, காமா ஆஸ்பத்திரி, நரிமன் ஹவுஸ் ஆகிய இடங்களிலும் தாக்குதலை அரங்கேற்றினர். இதேபோல அவர்கள் போலீஸ் வாகனத்தை கடத்தியும் தாக்குதலில் ஈடுபட்டனர். மஜ்காவ், வில்லேபார்லேவில் குண்டுகளும் வெடித்தன. இவ்வாறு மொத்தம் 12 இடங்களில் குரூர தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக 4 நாட்கள் நீடித்த இந்த கோர தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள், வெளிநாட்டினர், போலீசார் உள்பட 166 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 300-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இதில் போலீஸ் வாகனத்தை கடத்தி சென்றபோது பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை உயிரை துச்சமாக வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி இவன் மட்டும் தான். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம் ஒம்லே தனது உயிரை கொடுத்து அஜ்மல் கசாப்பை உயிரோடு பிடிக்க உதவினார். மற்ற 9 பயங்கரவாதிகளும் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டனர். பிடிபட்ட அஜ்மல் கசாப்பும் கடந்த 2012-ம் ஆண்டு புனே ஏரவாடா ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான். மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் 26/11 என்று உலகம் முழுவதும் அறியப்படுகிறது. தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் (சனிக்கிழமை) 14 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இருப்பினும் மக்களின் மனதில் ஏற்பட்ட வலியும், துயரமும் நீங்கவில்லை. தாக்குதலால் ஏற்பட்ட காயம் ஒட்டுமொத்த மனித இனத்திற்கும் ஆறாத வடுவாகவே உள்ளது. மும்பை மட்டும் இன்றி உலகில் எங்கும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறக்கூடாது என்பதே அனைத்து தரப்பு மக்களின் பிரார்த்தனையாக உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.