;
Athirady Tamil News

வடக்கு ஆளுநரை கண்டித்து மீண்டும் கடிதம் எழுதிய சீ.வி.கே!!

0

வடமாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து இரண்டாவது தடவையாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண சபையால் 2017 ஆம் ஆண்டில் வடமாகாண சுற்றுலாத்துறை பணியக நியதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரால் ஒப்புதல் வழங்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு அமுலில் இருக்கையில், அதே விடயத்தில் அதற்கு ஒத்ததான புதிய நியதிச்சட்டமொன்றை உருவாக்கிய ஆளுநரின்
செயற்பாடு கேலிக்கூத்தானதாகும்.

ஏற்கனவே ஒரு நியதிச் சட்டம் அமுலில் இருந்தமை பற்றி, அதனைப் பிரதி பண்ணிய ஆளுநர் மிகத் தெளிவாக அறிந்திருந்தார் என்பது இதனால் வெளிப்படையாகியுள்ளது.

ஆளுநரால் நியதிச் சட்டம் எனக் கூறப்படும் ஆவணத்தின் உள்ளடக்கம் 90 வீதம் மேலே குறிப்பிடப்பட்ட மாகாண சபையால் உருவாக்கப்பட்ட நியதிச் சட்டத்தை ஒத்ததாகவே உள்ளது.

அதிலுள்ள முக்கிய மாற்றம் “பணியகத்தின் முகாமைத்துவ சபையின் அமைப்பு” தொடர்பானதாகும். “ஏனைய உறுப்பினர்களை” தமது நோக்கங்களைப் பூர்த்தி செய்வதற்காக வெளியே இருந்து நியமிக்கும் அதிகாரத்தை தமதாக்கிக் கொள்வதற்காக – வடமாகாண அமைச்சருக்குள்ள அதிகாரத்தை ஆளுநருக்கு மாற்ற இவ்வாறு செயற்பட்டுள்ளார்.

ஊடகச் செய்திகளின்படி தமது வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவராக சுனில் திசாநாயக்க என்பவரை நியமித்தமையும், அவர் பாய்ந்தடித்து பலாலி விமான நிலையம் இம்மாதம் 12 ஆம் திகதி முதல் மீளவும் சேவைகள் ஆரம்பிக்கும் என ஊடக அறிக்கை வெளியிட்டமையிலிருந்து வெளிப்படையாகிறது.

ஆச்சரியப்படும் வகையில் இதுவும் இலங்கையின் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரான முன்னாள் வடக்கு மாகாண ஆளுநர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சந்திரசிறி அவர்களது அதிகாரங்களை முறையற்ற விதத்தில் தமதாக்கிக் கொண்டமையாகக் காணப்படுகின்றது.

2017 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நியதி சட்டம் இருக்கும்போது அதனை ஒத்த இரண்டு விடயங்களில் மாத்திரம் திருத்தங்களை கொண்டு மற்றுமொரு நியதிச் சட்டத்தை உருவாக்கிய வேண்டிய தேவை ஏன் எழுந்தது என்ற கேள்வி எழுகிறது.

இதில் ஆங்கிலம் மற்றும் தமிழுக்கு இடையில் பல முரண்பாடுகள் கூட காணப்படுகின்றது. புதிதாக ஆளுநர் எதையும் செய்யவில்லை. பழையதையே செய்துள்ளார்.

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பதவிக்கு வந்த புதிதில், வடமாகாண சபை சபா மண்டபத்தில் கூட்டத்தை நடாத்துவதற்கு அவர் என்னிடம் எழுத்து மூலம் அனுமதி அனுமதி கோரியதாகவும் அதனை தான் உடனடியாகவே நிராகரித்து விட்டேன் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.