;
Athirady Tamil News

டெல்லி மாநகராட்சி தேர்தல்- வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என பாஜக, காங்கிரஸ் புகார்..!!

0

டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை முதலே வரிசையில் வந்து வாக்களித்தனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் சிவில் லைன்ஸில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார். வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும நேர்மையான கட்சிக்கு வாக்களியுங்கள். ஊழல் செய்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் தெரிவித்தார். எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மந்திரி மீனாட்சி லேகி, தெற்கு விரிவாக்கம் பகுதி 2ல் உள்ள வாக்குச் சாவடியில் வாக்கை பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர், தங்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த தேர்தலில் மக்களிடம் இருந்து தகுந்த பதிலைப் பெறுவார்கள் என்றார். சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பது உலகிற்கே தெரிந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்நிலையில் சுபாஷ் மொஹல்லா வார்டில் பாஜகவிற்கு ஆதரவான 450 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இது டெல்லி அரசின் பெரிய சதி என்றும், இது குறித்து புகார் அளித்து, இந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த மேல்முறையீடு செய்வோம் என்றும் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

இதேபோல் வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். டல்லுபுராவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்கவில்லை. தமது மனைவி வாக்களித்துள்ளதாகவும், நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் தமது பெயர் இல்லை என்றும், அதிகாரிகள் சரிபார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே மாநகராட்சி தேர்தலில் காலை 10:30 மணி வரை 9 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக 13,638 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர், மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும்7-ந் தேதி எண்ணப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.