;
Athirady Tamil News

சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு – 10 பேரும் விளக்கமறியலில்!!

0

தெல்லிப்பளை வைத்திய சாலை சட்ட வைத்திய அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்து, வீதியில் கேக் வெட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 இளைஞர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கோப்பாய் பகுதியில் வசிக்கும் குறித்த சட்ட வைத்திய அதிகாரி தனது கடமையின் நிமித்தம் நேற்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்த வேளை , கோப்பாய் நாவலர் பாடசாலை முன்பாக வீதியை மறித்து மோட்டார் சைக்கிளில் நின்ற இளைஞர்கள் குழுவொன்று பிறந்தநாள் தினத்தினை கொண்டாடிய வண்ணம் இருந்துள்ளனர்.

இளைஞர்கள் குழுவின் பிறந்தநாள் கொண்டாடத்தினால் , அவ்வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டு இருந்தது. அதனால் சட்ட வைத்திய அதிகாரி தனது கடமைக்கு செல்ல முடியாத நிலைமை ஏற்ட்டமையால் , அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 10 இளைஞர்களை கைது செய்ததுடன் , அங்கு நின்ற இரண்டு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது 10 பேரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட பதில் நீதவான் , அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கும் திகதியிட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

வீதியில் கேக் வெட்டி சட்டவைத்திய அதிகாரிக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்தில் 10 பேர் கோப்பாய் பொலிஸாரால் கைது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.