;
Athirady Tamil News

மத்தியில் நிலையற்ற கூட்டணி அரசு அமைந்தால் இந்தியாவின் வளர்ச்சி பாதிக்கப்படும்- மத்திய மந்திரி பேச்சு..!!

0

உத்தரப்பிரதேச மாநிலம் கஜ்ரவுலா நகரில் உள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் புதிய இளம் வாக்காளர்களுடன் ஒரு கலந்துரையாடல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற் கொண்டுள்ள தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய சீர்திருத்த நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. கடந்த எட்டரை ஆண்டுகளில் இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கான பல்வேறு வாய்ப்புகளை மோடி அரசு உருவாக்கியுள்ளது. இந்திய இளைஞர்களை ஒட்டு மொத்த உலகமும் நம்பிக்கையுடன் பார்க்கிறது. ஏனென்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கான உந்து சக்தியாகவும், உலகத்திற்கான வளர்ச்சி இயந்திரமாகவும் அவர்கள் இருக்கிறார்கள். புதிய இந்தியா எதிர்காலத்தை மையமாகக் கொண்டது, அது இளைஞர்களின் தோள்களில் உள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் நிலையற்ற கூட்டணி அரசுகள் பதவி வகித்தன. இது போன்ற நிலையற்ற தன்மை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சியைப் பாதிக்கிறது. 2014-ஆம் ஆண்டு மக்கள் நிலையான அரசை தேர்வு செய்தனர். அது கொள்கைகளில் நிலைத் தன்மையையும் மாற்றத்திற்கான வலுவான அடித்தளத்தையும் ஏற்படுத்தியது. தற்போதைய மத்திய அரசு இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதையும், புதிய தொழில் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்துவதையும் முன்னுரிமையாகக் கொண்டு செயல்படுகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை தற்போது 80,000-ஐ கடந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் புதிதாக 5000 தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், முப்பரிமாண அச்சிடுதல், ட்ரோன் தொழில்நுட்பம், தொலை மருத்துவம் உள்ளிட்ட புதிய படிப்புகள் ஐடிஐ-களில் கற்பிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.