;
Athirady Tamil News

என் அம்மாவின் வாழ்க்கைக் கதை இதுதான்! – பிரதமர் மோடி நினைவலைகள்..!!

0

இந்த மூன்றெழுத்து மந்திரத்தின் முன் மயங்காத மனிதர்கள் உலகில் இல்லை. அப்படி இருக்கிறபோது, பிரதமர் மோடி மட்டும் அதற்கு விதிவிலக்காக இருந்து விட முடியுமா, என்ன?

அம்மாவின் வாழ்க்கை…
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடியின் 100-வது பிறந்தநாள் கடந்த ஜூன் மாதம் 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. அப்போது தனது தாயாருடனான நினைவலைகளை பிரதமர் மோடி தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் அவர் தனது தாயின் உன்னதமாக பக்கத்தை, அவரது தியாக வாழ்க்கையை காட்டி இருந்தார்.

எளிமைதான் அம்மா…
அதில் இருந்து சில துளிகள்…. அம்மா… இந்த வார்த்தைக்கு இணையாய் அகராதியில் வேறு எந்த வார்த்தையும் இல்லை. இது, அன்பு, பொறுமை, நம்பிக்கை இன்ன பிற முழு அளவிலான உணர்ச்சிகளின் சங்கமம் ஆகும். உலகமெங்கும் எந்த பாகுபாடுமின்றி அனைவரும் தங்கள் தாயின் மீது தனிப்பாசம் வைத்திருக்கிறார்கள். ஒரு தாய், தன் குழந்தைகளைப் பெற்றெடுப்பது மட்டுமின்றி, அவர்களின் மனங்களையும், ஆளுமையையும், தன்னம்பிக்கையையும் வடிவமைக்கிறாள். அப்படிச் செய்யும்போது, தாய்மார் தன்னலமின்றி தங்கள் சொந்தத்தேவைகளையும், விருப்பங்களையும் தியாகம் செய்கிறார்கள்.

என் வாழ்வில் நல்லவற்றுக்கெல்லாம் என் பெற்றோர்தான் காரணம் ஆவார்கள். என் அம்மா தனிச்சிறப்பானவர் மட்டுமல்ல, எளிமையுமானவர்.

இதை வாசிக்கும்போது….
எல்லா தாய்மார்களையும் போலத்தான் நானும் என் அம்மாவைப்பற்றி எழுதுகிறபோது, உங்களில் பலரும் அவரை எனது வார்த்தைகளுடன் தொடர்புபடுத்திப்பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன். அது மட்டுமல்ல, இதை நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தாயின் உருவத்தையும் நீங்கள் பார்க்க முடியும். ஒரு தாயின் தவம்தான், ஒரு நல்ல மனிதனை உருவாக்குகிறது. அவரது பாசம்தான், ஒரு குழந்தையை மனித மதிப்பீடுகளாலும், கரிசனைகளாலும் நிரப்புகிறது. தாய், ஒரு தனி நபரும் அல்ல, ஒரு ஆளுமையும் அல்ல. தாய்மைதான் தாயின் குணம். கடவுள்கள், பக்தர்களின் இயல்புக்கு ஏற்ப உருவாக்கப்பட்டவர்கள் என்று அடிக்கடி சொல்லப்படுவது உண்டு. அதுபோலத்தான், தாய்மார்களையும், அவர்களது தாய்மையையும், நாம் நம் சொந்த இயல்பு மற்றும் மனநிலைக்கு ஏற்ப அனுபவிக்கிறோம்.

தாய்ப்பாசம் அம்மாவுக்கு கிடைத்ததில்லை….
என் அம்மாவுக்கு தனது சொந்தத்தாயின் பாசம் கிடைத்தது இல்லை. இளம்வயதிலேயே என் பாட்டி, ஸ்பானிஷ் புளூ என்ற தொற்று நோய்க்கு பலியாகி விட்டார். தன் தாயின் முகமோ, அவரது மடியில் இருந்து அனுபவித்த சுகத்தையோ கூட என் அம்மாவால் நினைத்துப்பார்க்க முடியாது. தனது ஒட்டுமொத்த குழந்தைப்பருவத்தையும் தாயின்றி கழித்தவர், அம்மா. அவர் பள்ளிக்கும் போனதில்லை. அவரது குழந்தைப்பருவம், வறுமையும், ஏழ்மையும் நிறைந்ததுதான். அதுதான் கடவுளின் விருப்பம் என்று அம்மா நம்பினார். ஆனால் தன் தாயின் முகத்தைக்கூட பார்க்க முடியாதது, அவருக்கு எப்போதுமே வலியைத் தந்திருக்கிறது.

பல வீடுகளில் பாத்திரம் தேய்த்து…
குழந்தைகளான நாங்கள் எங்கள் படிப்பினை விட்டுவிட்டு வீட்டு வேலைகளில் தனக்கு உதவ வேண்டும் என்று அம்மா ஒருபோதும் எதிர்பார்த்தது இல்லை. எங்களிடம் அவர் உதவி கேட்டதும் கிடையாது. ஆனால் அவரது கடின உழைப்பைப் பார்த்து நாங்கள் தாமாகவே முன்வந்து உதவுவது எங்கள் தலையாய கடமை என நினைத்தோம்.

வீட்டுச்செலவுகளை கவனிப்பதற்காக அம்மா, சில வீடுகளுக்கு சென்று பாத்திரங்களை துலக்கித்தருவார். கூடுதல் வருமானம் வேண்டும் என்பதற்காக ராட்டை சுற்றுவார். பருத்தியை உரித்தெடுப்பது, நூல் நூற்பது என எல்லாவற்றையும் செய்வார். வாழ்வில் அம்மா, எதைப்பற்றியும் குறை சொன்னதில்லை. யாரைப்பற்றியும் குறை கூறியதில்லை. யாரிடமும் எதையும் எதிர்பார்த்ததும் இல்லை. இன்றைக்கும் அம்மா பெயரில் எந்தச்சொத்தும் இல்லை. அவர் தங்க நகைகளை அணிந்து நான் பார்த்தது இல்லை. அவர் ஒரு சின்னஞ்சிறு அறையில் எளிமையான வாழ்வு வாழ்வதைத்தான் விரும்பினார். என் அம்மாதான் என் ஆதர்ச சக்தி.

அம்மா சொன்ன அறிவுரை
2001-ம் ஆண்டு நான் குஜராத் முதல்-மந்திரி பதவி ஏற்பதற்கு முன்பாக அவரது ஆசியை நாடி நின்றேன். அப்போது அம்மா என்னிடம், நீ எதற்காக அரசாங்கத்தில் வேலை செய்யப்போகிறாய் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் சொல்ல விரும்புவது ஒருபோதும் லஞ்சம் வாங்காதே என்பதுதான் என்று சொன்னார். ஒருமுறை நான் எனக்கு மாபெரும் ஆசிரியையாக அமைந்த அம்மா உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் பொதுவெளியில் கவுரவிக்க விரும்பினேன். ஆனால் அம்மா, நான் ஒரு சாதாரண நபர்தான். நான் உன்னைப் பெற்றெடுத்திருக்கலாம். ஆனால் உனக்கு கற்பித்து, வளர்த்தெடுத்தவர் கடவுள்தான் என்று கூறி மறுத்துவிட்டார்.

மண்குடிசை நினைவுகள்
நாங்கள் வாத் நகரில் வாழ்ந்தது, மண்குடிசைதான். மழைக்காலத்தில் வீட்டின் கூரையில் இருந்து மழை நீர் ஒழுகும். அம்மா, அந்த மழைநீரை வீட்டில் இருந்த வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்து நிரப்புவார். இப்படிப்பட்ட பாதகமான சூழ்நிலையிலும், அம்மா மன உறுதியின் அடையாளமாக இருப்பார். என் அம்மாவின் வாழ்க்கைக் கதையில் இந்தியாவின் தாய் சக்தியின் தவம், தியாகம், பங்களிப்பு என எல்லாவற்றையும் நான் பார்க்கிறேன். அம்மாவையும், அம்மாவைப்போன்ற கோடிக்கணக்கான பெண்களையும் பார்க்கிறபோது, நமது இந்தியப்பெண்களால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை என்று கண்டுகொள்கிறேன்.

பாதம் பணிகிறேன்
ஒவ்வொரு இழப்பின் கதையையும் தாண்டி, போற்றுதலுக்குரிய ஒரு தாயின் கதைதான், அம்மாவின் வாழ்க்கைக்கதை. ஒவ்வொரு போராட்டத்திலும் அம்மாவின் மன உறுதி மேலானது. உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா. உங்கள் வாழ்கையைப் பற்றி பொதுவெளியில் எழுதும் தைரியத்தை இதுவரை நான் பெற்றதில்லை. உங்கள் பாதங்களில் பணிகிறேன் அம்மா! இவ்வாறு அதில் பிரதமர் மோடி தனது தாயைப் பற்றி உருக்கமாய் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அண்டை வீட்டுக்காரர்களின் நினைவலைகள்
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி பற்றிய நினைவலைகளை அண்டை வீட்டார் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுபற்றிய ஒரு பார்வை இது:- கீர்த்தி பென் படேல்:- ஹீராபா (எல்லோரும் இப்படித்தான் செல்லமாய் அழைக்கிறார்கள்) 70 ஆண்டு காலம் இங்கே வாழ்ந்திருக்கிறார். அவரை கிட்டத்தட்ட தினமும் சந்திப்போம். அவர் தாழ்மையானவர், எளிமையானவர். நான் இன்று என் அம்மாவை இழந்த வலியை உணர்கிறேன். எங்கள் அனைவருக்கும் அவர் ஆசி வழங்கி இருக்கிறார். அவர் எங்கள் ராஜமாதா. தாராபென் படேல்:- ஹீராபா எங்கள் குடும்பத்தில் ஒருவர் போலத்தான். அவர் எல்லோருடனும் நல்லிணக்கத்துடன் இருந்து வந்தார். ரமேஷ் பிரஜாபதி:- அவர் பிரதமரின் தாயாராக இருந்தபோதும் ஒரு சாதாரண பெண்மணிபோலத்தான் இருந்தார். எளிமையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். எல்லோருடனும் கலந்துவிடுவார். ஏழைகள் மீது கரிசனை வேண்டும் என்று எங்களுக்கெல்லாம் சொல்வார். கோகிலாபென் படேல்:- அவர் எப்போதுமே எளிமையான வாழ்க்கைதான் வாழ்ந்தார். தீபாவளிதோறும் எங்கள் ஒவ்வொருவரையும் அவர் வாழ்த்தி மகிழ்வார். நான் மட்டுமல்ல, இங்குள்ள ஒவ்வொருவரும் இன்று மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம். அவரோடு நாங்களும் வாழ்ந்தோம் என்பதில் எங்களுக்குப் பெருமை. இவ்வாறு அவர்கள் தங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டனர்.

https://www.dailythanthi.com/News/India/in-my-mothers-life-story-i-see-the-penance-sacrifice-and-contribution-of-indias-matrushakti-pm-modi-869147

You might also like

Leave A Reply

Your email address will not be published.