;
Athirady Tamil News

கேரளாவில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து- கல்லூரி மாணவர் பலி !!

0

கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள வளஞ்சேரியில் இருந்து மண்டல அளவிலான கல்லூரி மாணவர்கள், சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதற்காக ஒரு பஸ்சில் அவர்கள் புறப்பட்டனர். 44 மாணவர்கள் சுற்றுலாவில் கலந்து கொண்டனர். புத்தாண்டை சொந்த ஊரில் கொண்டாடும் வகையில் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 1.15 மணியளவில் இடுக்கி மாவட்டம் அடிமாலி அருகே அந்த பஸ் வந்து கொண்டிருந்தது.

ஒரு கொண்டை ஊசி வளைவில் பஸ் வந்த போது, எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய பஸ், அங்குள்ள பள்ளதாக்கில் கவிழ்ந்தது. விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால் பஸ்சுக்குள் மாணவர்கள் அனைவரும் நல்ல உறக்கத்தில் இருந்தனர். இதனால் அவர்கள் விபத்து ஏற்பட்டதும் அச்சத்தில் கூச்சலிட்டனர்.

விபத்து நடந்த பகுதியில் இருள் சூழ்ந்து இருந்ததால் அங்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை. அதே நேரம் பஸ், பள்ளத்தாக்கில் விழுந்த போது ஏற்பட்ட பெரும் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள் விரைந்து செயல்பட்டு மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். படுகாயத்துடன் கிடந்த மாணவர்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இந்த விபத்தில் பஸ்சின் அடிப்பகுதியில் மில்ஹாஜ் என்ற மாணவர் சிக்கிக் கொண்டார்.

அவர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டார். உடனடியாக கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், மில்ஹாஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த 40 மாணவர்கள் அடிமாலி தாலுகா மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், வெள்ளத்தூவல் போலீசார் மற்றும் மாவட்ட கலெக்டர் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.