;
Athirady Tamil News

ஆஸ்திரேலியாவில் துணிகரம் – இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் இனவெறி தாக்குதல் !!

0

ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் சுவாமி நாராயண் என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது. இதன்மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தியதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி உள்ளனர். இதுபற்றி தி ஆஸ்திரேலியா டுடே வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

நாட்டின் மெல்போர்ன் நகரின் வடக்கு புறநகர் பகுதியில் உள்ள மில் பார்க் என்ற இடத்தில் பிரபல சுவாமி நாராயண் கோவிலின் சுவர் மீது இந்தியா ஒழிக என பொருள்படும் வகையிலான இந்துஸ்தான் முர்தாபாத் என வர்ணம் பூசி உள்ளனர். இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்து உள்ளனர். இதற்கு கேரள இந்து சமூகமும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோவில் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. இந்த காலிஸ்தான் அமைப்பு, இந்திய பயங்கரவாதி என கூறப்படும் ஜர்னைல் சிங் பிந்திரவாலே என்பவரின் புகழ் பாடியுள்ளது. காலிஸ்தானின் தனி மாநில கோரிக்கையின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட அவர், பின்னாளில் புளூஸ்டார் அதிரடி நடவடிக்கையின்போது, இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்டார்.

இந்து சமூகத்தினரின் சார்பில் எம்.பி.க்கள் மற்றும் போலீசாரிடம் முறைப்படியான புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இருந்து இதுபோன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதலுக்கு கோவிலின் நிர்வாகம் கடும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளதுடன் அமைதி மற்றும் இறையாண்மைக்காக இறைவனை வேண்டி கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.