;
Athirady Tamil News

அ.தி.மு.க. தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்-டி.டி.வி. தினகரன் பேட்டி!!

0

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளையொட்டி கோட்டக்குப்பம் நகர மன்ற அலுவலக எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அ.ம.மு.க.பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழுப்புரம் கிழக்கு மாவட்ட அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், அ.ம.மு.க. துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சரும் மண்டல பொறுப்பாளருமான செந்தமிழன், துணை பொது செயலாளர் ரங்கசாமி, கட்சியின் அமைப்பு செயலாளர் கணபதி, தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் முத்துக்குமார், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளர் விஸ்வநாதன் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பதவி சண்டையால் கட்சி யாருக்கு சொந்தம் என்று நீதிமன்ற வரை சென்றுள்ளது. எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் தீய சக்தி என தி.மு.க.வை அடையாளம் காட்ட வேண்டும். தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டு வருடம் ஆகின்ற நிலையில் தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை ஒன்றையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஓர் அணி திரள வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அ.ம.மு.க. நிர்வாகிகளை சந்தித்து வருகிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். கட்சியின் சின்னம் இருப்பதால் அ.தி.மு.க உண்மையாகி விடாது.

ஜனநாயக ரீதியாக வெற்றி பெற்ற உண்மையான இயக்கம் அ.ம.மு.க. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ஜனநாயக அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம். இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசி வேலியே பயிரை மேய்வது போல் செயல்படும் கவர்னரை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு விவகாரத்தில் கவர்னர் அரசியல் செய்கிறார். மத்திய அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டு அமைதி பூங்காவன தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தும் கவர்னரை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநில,மாவட்ட,நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.