;
Athirady Tamil News

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐ.அ.இராச்சியம் உதவ வேண்டும் : பாகிஸ்தான் பிரதமர் கோரிக்கை!!

0

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்த உதவுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திடம் பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கோரியுள்ளார்.

கடந்த வாரம் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹம்மத் பின் ஸயீத் அல் நஹ்யானிடம் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.

அல் அரேபியா அலைவரிசைக்கு அளித்த செவ்வியில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுடனான 3 போர்களை சுட்டிக்காட்டிய அவர், பாகிஸ்தான் பாடம் கற்றுவிட்டது எனவும், அமைதியாக வழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேற்படி செவ்வியில், ”இந்தியாவுடன் ஆழமான, நேர்மையான, அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விரும்புகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதற்கு சம்மதிக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே பற்றி எரியும் பிரச்சினைகளாக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதன் மூலம் தீர்வு காண முடியும். இதுதான் நான் இந்திய தலைமைக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நான் விடுக்கும் செய்தி. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய பங்காற்ற முடியும்.

காஷ்மீரில் நாளுக்கு நாள் மனித உரிமை மீறல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. ஜம்மு காஷ்மீருக்கு தன்னாட்சி உரிமை அளிக்கும் சட்டப்பிரிவு 370ஐ இந்தியா 2019ம் ஆண்டு ரத்து செய்துவிட்டது. இந்தியாவில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று இந்தியா உலகுக்கு அறிவிக்க வேண்டும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அயல் நாடுகள். அவை இணைந்து வாழ்ந்தாக வேண்டும். நாட்டில் எந்த அளவுக்கு அமைதி இருக்கிறதோ அந்த அளவுக்கே முன்னேற்றம் இருக்கும். இரு நாடுகளும் சண்டையிட்டுக்கொண்டே இருந்தால் நேரமும் பணமும் வீணாகும். இந்தியாவுடன் நாங்கள் 3 போர்களை சந்தித்துவிட்டோம். இந்த போர்கள் பாகிஸ்தானியர்களுக்கு கூடுதலான துன்பத்தையும், வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையுமே அளித்திருக்கின்றன. நாங்கள் எங்களுக்கான பாடத்தை தற்போது கற்றுக்கொண்டுவிட்டோம். நாம் அமைதியை விரும்புகிறோம்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹம்மத் பின் ஸயீத் பாகிஸ்தானின் சகோதரர். ஐக்கிய அரபு இராச்சியம் ஒரு சகோதர நாடு. மொஹம்மத் பின் ஸயீத், இந்தியாவுடனும் நல்லுறவுகளைக் கொண்டுள்ளார். இரு நாடுகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதில் அவர் ஒரு முக்கிய பங்காற்ற முடியும். பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டால் நாம் உண்மைத்தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்’ எனவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.