ஈரோடு இடைத்தேர்தல்: பாஜக தலைவர் அண்ணாமலையுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு !!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி அணியினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளனர். அவ்வகையில், பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று பிற்பகல் சந்தித்தனர். இதற்காக சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தங்கமணி, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், இந்த சந்திப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தங்கள் தரப்புக்கு ஆதரவு அளிக்க ஈ.பி.எஸ் அணியினர் கோரினர். அதன்பின்னர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கமலாலயம் வந்து அண்ணாமலையை சந்தித்து பேசினர். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவு கேட்டிருக்கலாம் என தெரிகிறது.
பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓபிஎஸ் கூறியிருக்கிறார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனை தீவிரமடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்து நடந்த இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழக பாஜகவின் நிலைப்பாட்டைப் பொருத்தே அடுத்தகட்ட நகர்வு இருக்கும்.