;
Athirady Tamil News

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தள்ளிவைப்பு!!

0

வாரத்தில் 5 நாள் வேலை, தேசிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருதல், ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், சம்பள உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 30 மற்றும் 31-ந்தேதிகளில் நாடுதழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்துக்கு ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதனால், இன்று 4-வது சனிக்கிழமை என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அடுத்த 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாகவும் தொடர்ந்து 4 நாட்கள் வங்கிச்சேவை முடங்கும் அபாயம் நிலவியது.

இதற்கிடையே, வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை தொடர்பாக மும்பையில் துணை தலைமை தொழிலாளர் ஆணையர் தேஜ்பகதுர் முன்னிலையில் கடந்த 24-ந்தேதி சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில், நேற்று மீண்டும் மும்பையில் தேஜ்பகதுர் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அதில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சிஎச்.வெங்கடாசலம் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 27-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில், 9 வங்கி ஊழியர்கள் சங்கங்களின் தலைவர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் கருத்துகளில் வேறுபாடு இருந்தபோதிலும், நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பிறகு வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்க ஒப்புக்கொண்டனர்.

கூட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாற்றம் காரணமாக, வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்படுகிறது. இந்திய வங்கிகள் அமைப்பு, 31-ந்தேதி, ஐக்கிய வங்கி சங்கங்கள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும். அதில், வாரத்தில் 5 நாள் வேலை, ஓய்வூதியத்தை மாற்றி அமைத்தல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருதல் ஆகிய 3 முக்கிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். கருத்தொற்றுமை உருவாகாவிட்டால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு தேதி நிர்ணயிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.