;
Athirady Tamil News

பங்களாதேஷின் கோரிக்கை குறித்து அரசாங்கம் அவதானம்!!

0

பங்களாதேஷ் வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை செப்டெம்பரில் மீள செலுத்துமாறு கோரியுள்ளது. வெளிநாட்டு கடன்களை மீள செலுத்தும் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், பங்களாதேஷின் இந்த கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

வெளிநாட்டு கடன் விவகாரம் தொடர்பில் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள கிளிபர்ட் ஹான்ஸ் மற்றும் லசார்ட் நிறுவனங்கள் ஊடாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பங்களாதேஷிடமிருந்து கடந்த 2021ஆம் ஆண்டு பெற்றுக் கொண்ட 200 மில்லியன் டொலரை எதிர்வரும் செப்டெம்பருக்குள் மீள செலுத்துமாறு இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவே இறுதி கால அவகாசம் என்றும் பங்களாதேஷ் அறிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், செப்டெம்பரில் இந்தக் கடனை மீள செலுத்துவதற்கான இயலுமைய அரசாங்கத்திற்கு காணப்படுகிறதா? என்று கேட்கப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் ,

பங்களாதேஷ் வழங்கிய கடனை மீளக் கோரியுள்ளது. வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக நாம் அறிவித்துள்ளமையினால் சில நாடுகள் எமக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளன. இவ்வாறு அமெரிக்காவில் எமக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் கடன் தீர்வு நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் அரச பிரதிநிதியாக சட்ட ரீதியான செயற்பாடுகளுக்காக கிளிபர்ட் ஹான்ஸ் நிறுவனத்தின் சேவைகளை பெற்று வருகிறது.

அதே போன்று கடன் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக பிரான்ஸின் லசார்ட் நிறுவனத்தின் சேவைகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

அதற்கமைய கடன் தீர்வு நடவடிக்கைகள் அதற்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களாலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.