;
Athirady Tamil News

ரணிலின் ரிட் மனு குறித்த அறிவிப்பு !!

0

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில்லை என்று அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், புதன்கிழமை (08) அறிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கண்டுபிடிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் மேற்குறிப்பிட்ட விடயத்தை மன்றுக்கு அறிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது மனுவில், மனுதாரர் தொடர்பாக 17-51 பக்கங்களில் உள்ள கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளின் செயற்பாட்டை இடைநிறுத்த இடைக்கால உத்தரவை கோரியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளர்களான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சந்திரசிறி ஜயதிலக மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஆணைக்குழுவின் செயலாளர் பேர்ல் வீரசிங்க மற்றும் அப்போதைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

2020 செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில், ஜனாதிபதி ஆணைக்குழுவில் தான் சமுகமளித்திருந்ததாகவும் பிரதிவாதியாக தான் கருதப்படவில்லை என்றும், சாட்சியாக மாத்திரம் கருதப்பட்டிருந்ததாகவும் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் மனுதாரர் பற்றிய கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகள் அல்லது வழக்குடன் தொடர்புடைய பொருட்கள் உள்ளன என்றும் மனுதாரர் கூறினார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் போது, இயற்கை நீதி விதிகள் முழுமையாக மீறப்பட்டுள்ளதாகவும், தமக்கு முறையான விசாரணைகள் வழங்கப்படவில்லை எனவும் முன்னாள் பிரதமர் மனுவில் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.